விவாதக் களம்
விவாதக் களம்
முஸ்லிமல்லாதவர்கள் விவாதம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களும், அதற்கு நம்முடைய விளக்கமும் இங்கே இடம் பெறுகிறது.
செங்கொடி என்பவர் இஸ்லாம் குறித்து இணையதளத்தில் எழுதி வருவது பற்றி ஒரு சகோதரர் நமது கருத்தைக் கேட்டிருந்தார். அவர் எழுதியது இது தான்.
அஸ்ஸலாமு அலைக்கும். தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
மேலும், செங்கொடியின் தளத்திலேயே சில சகோதரர்கள் விவாதத்திற்கு அழைத்தும் அவர் மறுத்து விட்டார். அப்துல்லதீப் என்பவர் பின்வருமாறு செங்கொடிக்கு கடிதம் எழுதினார்.
நண்பர் செங்கொடி அவர்களுக்கு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. முஸ்லீமாக பிறந்து, முஸ்லீம் பெயர் கொண்ட தாங்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என்று தாங்கள் இஸ்லாத்தைப் பற்றி தவறாக எழுதி வருகிறீர்கள். கீழ்க்கண்ட விவாதத்திற்கு தாங்கள் தயாரா?
இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 11,12 ஆகிய தேதியில் சென்னையில் வைத்து TNTJ PJ..அவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் விவாதம் நடைபெறவுள்ளது. எனவே தாங்களோ அல்லது தங்கள் இயக்கம் சார்பாகவோ அதில் கலந்து விவாதிக்க விரும்பினால் ஏற்பாடு செய்து தருவேன்.
தலைப்பு 1. இறைவன் இருக்கிறான். அவன்தான் இப்பிரபஞ்சத்தை படைத்தான்.
2.குர்ஆன் இறைவேதம். அதில் மூடநம்பிக்கையோ மனிதனுக்கு கேடு விளைவிப்பவையோ இல்லை.
3.சொர்க்கம், நரகம், மறுமை வாழ்க்கை உண்டு. இந்த ஒப்பந்த விவரம் அறிய http://www.onlinepj.com/vimarsanangal/pakiranga_vivatham/ என்ற தளத்திற்கு சென்று (விமர்சனங்கள் பகுத்தறிவாளர்களுடன் பகிரங்க விவாதம் ) பார்க்கவும். அப்துல் லத்தீப்
இவ்வாறு அப்துல் லதீப் எழுதியதற்கு செங்கொடி பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.
செங்கொடி, மேல் செப்டம்பர் 30th, 2009 இல் 10:38 மாலை சொன்னார்: நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு, தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும்.
என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து. தோழமையுடன் செங்கொடி
தங்களின் மேலான மறுப்புறையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து,
இனிமை.
இதற்கு நாம் அளித்த பதில்
ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாதத்தில் தான் உடனுக்குடன் கேள்வி கேட்க முடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டு பிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச் சேர்ந்தவர்களோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்குப் பயப்பட வேண்டியதில்ல. அவர்களே மூட நம்பிக்கையின் ஒட்டு மொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார்.
அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனை கூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிக் கொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேலிக் கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நாம் நம்புவதால் தான் விவாதத்துக்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாத்தின் மூலம் அதை அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்துக்கு முன்பே தோற்று விட்டதாக எழுதிக் கேட்பது மடத்தனமானது.
இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர்க் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிக்கலாம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையைத் தோலுரிக்க நாம் தாயார்.
இந்தக் கருத்தை நாம் தெரிவித்த பிறகு அதே சகோதரர் பிவருமாறு செங்கொடியின் பதிலை அனுப்பியுள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும், தாங்கள் கருத்துபகுதியில் தந்த பதிலையும் முகப்பில் உள்ள அறிவிப்பையும் செங்கொடியின் தளத்தில் பின்னூட்டமாக இட்டதற்கு அவர் தந்த பதில் கீழே,
சில நாட்களுக்கு முன்பு பிஜே ஆன்லைன் எனும் தளத்தில் இடம்பெற்ற செங்கொடி குறித்த கேள்வி பதில் இது.
பல நண்பர்கள் இது போல் நேரடி விவாதத்திற்கு செல்லுங்கள் என்று பின்னூட்டமாகவும் தனி அஞ்சலாகவும் கேட்டிருந்தனர். ஏற்கனவே இது குறித்து பதில் கூறியிருப்பதால் இப்போது அவசியமில்லை என எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக வரும் பின்னூட்டங்கள் இதையே மையப்படுத்தி இருந்ததால் மீண்டும் கூறுவதில் பிழையொன்றுமில்லை எனும் எண்ணத்தில் இதை எழுதுகிறேன். ஏற்கனவே நான் எழுதியவற்றை (கொஞ்சம் விரிவாக தொகுத்து தருகிறேனேயன்றி புதிதாக இதில் ஒன்றுமில்லை.
இஸ்லாம் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே என்ற பெயரில் நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடர்கட்டுரையை நான் எழுதுவதன் நோக்கம் குறித்து நுழைவு வாயில் எனும் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தேன். இவ்வுலகில் மக்களின் துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் யார் காரணமாக இருக்கின்றனர்? அதை எவ்வழியில் தீர்க்கமுடியும்? என்பதை அறிந்துகொள்வதற்கு, இறந்தபிறகு கிடைப்பதாக நம்பப்படும் சொர்க்க நரகம் பற்றிய நம்பிக்கை தடையாக இருப்பதால் அதை தகர்க்கமுனையும் என்னளவிலான முயற்சிதான் இக்கட்டுரைகள்.
இது தொடர்பாக எழுப்பப்படும் ஐயங்களுக்கும் (அதில் சாறமிருந்தால்) விடையளித்து வருகிறேன். இன்னும் எழுப்பப்படுபவைகளுக்கு விடையளிப்பேன், அது கட்டுரையை எழுதுபவன் எனும் முறையில் என்னுடைய கடமையாகும். மாறாக இப்படி எழுதுவதால் குறிப்பிட்ட ஒருவருடன் நேரடி விவாதத்திற்கு போய்த்தான் ஆகவேண்டும் என்றால்
நேரடி விவாதம் என்பதும் எழுத்து விவாதம் என்பதும் விவாத வகைகளே, இதில் ஒன்று வீரமானது மற்றது கோழைத்தனமானது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டுக்கும் தனிப்பட்ட இயல்புகள் இருக்கின்றன. நேரடி விவாதம் என்பது ஒரே தளத்தில் நின்று வாதாடுபவர்களுக்கு பொருத்தமானது. எழுத்துவடிவ விவாதம் என்பது வேறுபட்ட தளங்களைச் சார்ந்தவர்களும் வாதிடுவதற்கு பொருத்தமானது.
எடுத்துக்காட்டாக குரான் ஹதீஸின் அடிப்படையில் இருவர் வாதிட்டால், இருவருமே குரானின் வசனங்களிலிருந்தோ, ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தோ தான் மேற்கோள்களை காட்டுவர். இருவருமே அவைகளில் புலமையானவர்களாக இருப்பதினால் ஒருவர் கூறியதை மற்றொருவர் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே நேரடி விவாதம் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். இஸ்லாமியர் ஒருவரும் கம்யூனிஸ்ட் ஒருவரும் விவாதம் செய்தால், குரானில் இந்த வசனம் இப்படி கூறுகிறது என ஒருவர் குறிப்பிட்டால் மற்றவர் அப்படி கூறப்பட்டிருக்கிறதா? என சரிபார்க்க வேண்டும். மூலதனத்திலிருந்தோ ஏனைய மார்க்ஸிய நூல்களிலிருந்தோ ஒருவர் சில மேற்கோள்களை காட்டினால் மற்றவர் அப்படி இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு நேரடி விவாதத்தில் வாய்ப்பு இல்லை. ஒருவர் கூறுவதை நம்பி பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவர் எடுத்து வைக்கும் கருத்துகளுக்கான ஆதாரங்களை சான்றுகளை அது உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இணையத்தின் வாயிலாக சிரமமின்றி எடுத்து வைக்கலாம். நேரடி விவாதத்தில் இதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஒருவர் தொடுக்கும் கேள்விகளை சிந்தித்து விளங்கி பதில் கூறுவதற்கான கால அவகாசம் நேரடி விவாதத்தில் கிடையாது. அந்த நேரத்தில் தோன்றுவதைக் கொண்டே பதில் கூறும் நிலை ஏற்படும். இது போன்ற இன்னும் பலவற்றினால் நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
ஆனால் இதில் சில எதிர்க்கூறுகளும் உள்ளன. நேரடி விவாதம் விரைந்து முடிந்து விடும் எழுத்து விவாதம் நீண்டு கொண்டிருக்கும்.
விவாதிப்பதன் பலன் என்ன? யார் அறிவாளி, யாருக்கு அதிக விவரங்கள் தெரியும் என காட்டிக் கொள்வதற்கா? நிச்சயம் இல்லை. சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், நடப்பு நிலையை உரசிப் பார்ப்பதற்குமான உரைகல். தன்னுடைய நிலையை பரிசீலனைக்கு உட்படுத்த மாட்டேன் என்று கூறும் யாரும் விவாதத்தில் பதில் கூற முனைவாரே தவிர உண்மைகளை உணர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். என்னைப் பொருத்தவரை நான் பலருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன் (கவனிக்கவும் நேரடி விவாதத்தில்) முதலில் நான் எடுத்து வைப்பதே, கம்யூனிசம் தவறு என என்னை நீங்கள் உணரச் செய்து விட்டால் உங்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு தொழ வருவதற்கு நான் தயார். அதே நேரம் இஸ்லாம் தவறு என உங்களை நான் உணரச் செய்துவிட்டால் இஸ்லாத்தை விட்டுவிடுவதற்கு நீங்கள் முன்வருவீர்களா? என்பது தான் என்னுடைய முதல் கேள்வியாக இருக்கும்.
இதுவரை யாரும் இதை ஏற்றுக் கொண்டவர்களும் இல்லை கம்யூனிசம் தவறு என நிரூபித்தவர்களும் இல்லை. இதே அடிப்படையில் தான் நண்பர் அப்துல் லத்திப் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கையிலும் கூறியிருந்தேன். இஸ்லாம் பொய் என்று எழுதித்தந்தால் தான் விவாதிப்பேன் என நான் கூறவில்லை மாறாக விவாதத்தின் முடிவில் உங்களுடைய நிலையை நிரூபிக்க முடியாமல் போனால் உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்துவீர்களா? என்பது தான் கேள்வி. இங்கு தோல்வி என்று ஒன்றுமில்லை. பரிசீலனைக்கே முன்வரமாட்டோம் என்பவர்களோடு விவாதிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கையின் மொத்தவடிவமாக இருப்பதால் தான் பயப்படுகிறீர்கள் என்று பதிலும் பல பின்னூட்டங்களும் தங்களை மறைத்துக் கொள்கின்றன. நான் நேரடி விவாதத்திற்கு வர மாட்டேன் என சொன்னதில்லை. எழுத்து வடிவ விவாதம் சிறந்தது என்று தான் கூறுகிறேன். நேரடி விவாதத்திற்கும் நான் தயாரகவே உள்ளேன். ஆனால் இப்போது இயலாது, காரணம் நான் இந்தியாவில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நானே உங்களை தொடர்பு கொள்கிறேன் என முன்பு நண்பர் ஷேக் தாவூது அவர்களின் தளத்திலேயே பின்னூட்டம் இட்டுள்ளேன்.
மாறாக எங்கள் இயக்கத்தவர்களுடன் பேசி ஏற்பாடு செய்யுங்கள் என்றால் அது என்னுடைய வேலை இல்லை. அவசரம், அவசியம் என்றால் தொலைபேசி இலக்கம் தருகிறேன், நேரடியாக பேசிக்கொள்ளலாம்.
என்னைப் பொருத்தவரை நேரடி விவாதமானாலும், எழுத்துவடிவ விவாதமானாலும் நான் ஆயத்தமாகவே உள்ளேன். எழுத்து வடிவ விவாதமென்றால் இந்த நொடியிலிருந்தே, நேரடி விவாதமென்றால் இப்போது நாள் குறிக்க முடியாது. இது தான் என்நிலை. பிஜே அவர்கள் தளத்தில் நிறைய விவாதங்கள் இருக்கின்றன, நேரடியும் எழுத்தும் கலந்து. அப்படி இருக்கும் போது நேரடியாக வந்தால் மட்டுமே என்பது ஏன்? எழுத்து வடிவில் தொடங்கலாம்.
இவ்வாறு ஒரு இடுகையை இடுவதற்கு காரணமான நண்பர் இனிமை அவர்களுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் நன்றி. தங்களின் மேலான ஆலோசனை எதிர்பார்த்து,
இனிமை.
இதற்கு நாம் அளிக்கும் பதில் இது தான்.
நேரடி விவாதம் குறித்து சொல்லப்படும் கருத்து ஏற்கத் தக்கது அல்ல.
விவாதத்தின் போது குர்ஆன் ஹதீஸை நாம் எடுத்துக் காட்டினால் அதை உடனடியாக சரி பார்க்க அவர்களுக்கு இயலாது என்பதும், அவர்கள் கம்யூனிசம் குறித்து எடுத்து வைத்தால் நாம் சரிபார்க்க முடியாது என்பதும் காரணம் என்றால் அதற்கு நேரடி விவாதத்தின் ஒப்பந்தத்தில் வழி காணலாம்.
விவாதத்தில் காட்டப்படும் மேற்கோள்கள் எதுவானாலும் அதற்கான ஆதாரத்தை இரு தரப்பும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டால் இது ஒரு பிரச்சனையே அல்ல.
நேரடி விவாதத்தில் எதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்களோ அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்தக் காரணம் ஏற்கத் தக்கது அல்ல.
ஒருவர் தவறான வாதத்தை எடுத்து வைத்தால் அவர் வாயாலேயே அதை ஒப்புக்கொள்ள வைத்து உண்மை எது பொய் எது என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் வாய்ப்பு நேரடி விவாதத்தில் தான் உண்டு.
எழுத்து வடிவிலான விவாதம் என்றால் வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டு போகலாம். அதிக இடை வெளி இருப்பதால் மக்களால் உண்மையை எளிதில் புரிய முடியாது.
சில விஷயங்களுக்குப் பதில் கூற முடியாத போது அதை ஒப்புக் கொள்ளாமல் சம்மந்தமில்லாதவைகளை எழுதுவதும் கடைசியில் அதற்குப் பதில் கூறுவதாகவும் கூறிக் கொண்டு நாட்களைக் கடத்துவதும் எழுத்து விவாதத்தில் உண்டு என்பதை அனுபவப் பூர்வமாக நான் அறிகிறோம்.
எந்த மனிதரும் பொது மக்கள் மத்தியில் பேசுவது போல் எதிரியின் முன்னிலையில் பேச மாட்டார். மிகச் சரியான தகவலையே பேசுவார். எழுத்து விவாதம் என்பது எதிரியில் முன்னிலையில் தெரிவிக்கும் கருத்து அல்ல. பொது மக்களை வசீகரப்படுத்தும் தந்திரம் தான் அதில் மிகைத்திருக்கும். நேரடி விவாதம் என்பது எதிரியின் முன்னிலையில் கருத்தைத் தெரிவிப்பது என்பதால் அது தான் ஆழமானதாகவும் அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும்,
கம்யூனிஸம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதை அவர் விடுவதாகவும் இஸ்லாம் தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை நீங்கள் விடுவீர்களா என்றும் இப்போது கேட்பது போல் முன்னர் கேட்கவில்லை.
விவாதம் என்றாலே இது தான் அர்த்தம். எது தவறு என்று நிரூபிக்கப்படுகிறதோ அதை விட மாட்டென் என்றால் அது விதண்டா வாதம். இஸ்லாம் தவறு என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அவர்களால் நிரூபிக்க முடியாது என்பதால் தான் விவாதத்துக்கு அழைக்கிறோம். இஸ்லாம் தவறு என்று அவர்கள் நிரூபித்து விடுவார்களானால் தவறானது என்று நிரூபிக்கப்பட்டதில் நாங்கள் இருக்க மாட்டோம். அது போல் கம்யூனிசம் தவறு என்பது மிக எளிதில் நிரூபிக்கத் தக்கது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். இஸ்லாம் தவறு என்று இது வரை நிரூபித்தவர் எவரும் இல்லை என்பதையும் அவர் பாணியில் நானும் உறுதி படக் கூறுகிறேன்.
விவாதம் என்பது திடீரென உட்கார்ந்து பேசுவது அல்ல. இது குறித்து இரு தரப்பும் கலந்து பேசி தகுந்த விதிமுறைகளை வகுத்துக் கொண்டு தான் விவாதம் நடத்துவோம். எனவே நேரடி விவாதம் தொடர்பாக என்னென்ன குறைபாடுகள் தெரிவிக்கப்படுகிறதோ அதைச் சரி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டால் அதிகப் பயனுள்ள வகையில் நேரடி விவாதத்தை அமைக்க முடியும்.
இப்போது எழுத்து வடிவிலான விவாதம் குறித்த அவரது தயக்கம் நீங்கிவிட்டதால் விவாத ஒப்பந்தத்துக்கான தேதியை அவர் அறிவிக்கட்டும். ஒப்பந்தம் செய்யும் போது தேவையான அவகாசத்தை இருவரும் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக நாம் காத்திருக்கிறோம்.
செங்கொடியின் பதில்
இதற்கு செங்கொடி அவர்கள் அளித்த பதிலை இனிமை நமக்கு அனுப்பியுள்ளார்.அஸ்ஸலாமு அலைக்கும்,
சென்ற 9 ந் தேதியே இந்த செங்கொடியின் பதிலை பதிவு செய்தேன். சரியாக பதிய வில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் பதிவு செய்கிறேன். முன்னர் தந்தது சரியாக இருந்தால் இதை பொருட்படுத்த வேண்டாம்.
அவர் தளத்தில் 8 ந் தேதியே தந்த பதில் இது, //செங்கொடி தளத்திற்கும் பிஜே அவர்களின் தளத்திற்கு பாலமாக செயல்பட்ட நண்பர் இனிமை அவர்களுக்கு நன்றி.
நேரடி விவாதத்தின் குறைகளாக நான் குறிப்பிட்டிருந்தவைகளை நேர்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யலாம் என அறிவித்ததற்கும், பரிசீலனைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கும் பிஜே அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.
நான் இந்தியாவில் இல்லை என்பதாலும், தேதி குறித்து ஊர்வரும் அளவிற்கு நான் மேல்நிலை ஊழியனாக இல்லாததாலும், விடுப்பிற்கான காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருப்பதாலும் இப்போது நாள் குறிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஊர் வர முயற்சிக்கிறேன். அது சமயம் நண்பர் இனிமைக்கோ அல்லது நேரடியாக பிஜே அவர்கள் தளத்திற்கோ தகவல் தெரிவிக்கிறேன்.
இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு முனைந்த தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தோழமையுடன்
செங்கொடி
பிகு: நண்பர் இனிமைக்கு, இதையும் செங்கொடி சார்பில் பிஜே தளத்தில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//
காத்திருப்போம், இன்ஷா அல்லாஹ்.
நமது பதில்
வெளிநாட்டில் இருப்பதால் விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள முடியாது என்ற காரணம் ஏற்கத்தக்கது தான். அவர் ஊர் வரும் போது தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றட்டும், அது வரை நாம் காத்திருப்போம். - பீஜேமற்றொரு சகோதரர் கிறித்தவர்களுடன் விவாதம் செய்வது குறித்து கேட்டிருந்தார். அதையும் அதற்கான நமது பதிலையும் கீழே தந்துள்ளோம்.
கிறித்தவர்களின் அழைப்பு
இயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு
என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார்.
அதற்கு நாம் அளித்த பதில்
விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.
மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள். இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்
08.01.2010. 09:48

