கசாபை அவசரமாக தூக்கிலிட என்ன காரணம்

கசாபை அவசரமாக தூக்கிலிட என்ன காரணம்?
மசூது கடையநல்லூர்

அவசரமாகவும், இரகசியமாகவும் தூக்கிலிட்டுள்ளனர். தூக்கிலிடப்பட்ட செய்தி பிரதமருக்கே தெரியாது எனவும், அந்த அளவுக்கு இரகசியம் காத்ததாகவும் அமைச்சர் ஷிண்டே கூறுகிறார்.

மரணத்தை ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிப்பது இஸ்லாமிய அடிப்படையில் வரவேற்கத்தக்கது என்ற போதும் இந்திய அரசின் இந்த அவசரமான பாரபட்சமான நடவடிக்கையை நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்வத்தை விட பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது ராஜீவ் படுகொலையாகும். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பிறகுதான் கசாபுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

கசாபுக்கு முன்னர் 16 பேர் தூக்கிலிடப்படும் பட்டியலில் இருக்கும் போது 16 பேரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு கசாப்பை அவசரமாக தூக்கில் போட்டுள்ளனர்.

இதற்கு இன்று வரை மத்திய அரசும், மராட்டிய அரசும் நாட்டுமக்களுக்கு தக்க பதிலைக் கூறவில்லை.

காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக இந்துத்துவா கொள்கையைக் கையில் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்துக்களில் அதிகமானவர்களின் வாக்குகளை பெறலாம் என்று கணக்குப் போட்டு செயல்பட்டு வருகிறது.

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் அதிக பிள்ளை பெறுவதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று காங்கிரஸ் முதல்வர் கூறியதையும், ஹைதராபாத் சார்மினாரை அப்புறப்படுத்தும் திட்டத்துடன் சட்டவிரோதமான நடைபாதைக் கோவிலை விரிவுபடுத்த ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்ததும் இதற்கு சில உதாரணங்கள். அந்தப் பட்டியலில் கசாபை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

குஜராத்தில் விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் மோடிக்குச் சமமாக இந்துத்துவா கோசத்தை முன்னெடுப்பதற்காகத்தான் கசாப்பை தூக்கிலிட அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் நாங்கள் சமரசம் செய்யமாட்டோம் என்று கூறி பிரச்சாரம் செய்யத்தான் இந்த அவசரம்.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 16 பேர் கசாபுக்கு முன்பே தூக்கில் போட தயார் நிலையில் இருந்து கசாபை மட்டும் தூக்கில் போட்டது.
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை நாட்டு மக்களுக்கு சொல்லாமல் மறைத்தது
தூக்குத் தண்டனை அளிக்கப்படும் முன் கடைப் பிடிக்க வேண்டிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்ததை வெளிப்படுத்தாமல் மறைத்தது.
கசாப் முஸ்லிமாக இருக்கும் போது இஸ்லாமிய அடிப்படையில் அவரது சடங்குகள் செய்வதற்கு ஏற்ப முஸ்லிம்களிடம் அவரது உடலை ஒப்படைக்காமல் சிறைக்குள் புதைத்தது
என ஏராளமான குற்றங்களை மத்திய அரசும், மராட்டிய அரசும் செய்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த அத்துமீறல்களையும், ஒரே குற்றம் செய்த முஸ்லிமையும் முஸ்லிம் அல்லாதவனையும் சமமாக நடத்தாத பாரபட்சத்தையும் யாருமே கண்டிக்காமல் மௌனம் சாதிக்கின்றனர்; வரவேற்கின்றனர் என்பது கூடுதலாக கவனத்தில் கொள்ளத்தக்கது.


Published on: December 5, 2012, 8:31 AM Views: 548

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top