முஸ்லிம்-அத்தியாயம் : 7

 அத்தியாயம் : 7

பாடம் : 1

பயணிகளின் தொழுகையும் தொழுகையை (அவர்கள்) சுருக்கித் தொழுவதும்.

1219 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை (ஆரம்பத்தில்) சொந்த ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (இரண்டு இரண்டு ரக்அத் களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியவற் றில்  இரண்டு ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டன.2

1220 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது இரண்டு ரக்அத்களாகக் கடமையாக்கினான். பின்னர் சொந்த ஊரில் தொழும் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தினான்; பயணத் தொழுகை முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1221 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை, ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், "ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக்கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "(இது தொடர்பாக) உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்த விளக்கத்தைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் அளித்துவந்தார்கள்'' என்றார்கள்.3

1222 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:          

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர் களிடம் "நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை'' (4:101) என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது "(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1223 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும், பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்.4

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1224 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் தொழுகையை பயணிக்கு இரண்டு ரக்அத்களாகவும், உள்ளூரிலிருப்ப வருக்கு நான்கு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் (இருப்பவருக்கு) ஒரு ரக்அத்தாகவும் கடமையாக்கினான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1225 மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(வெளியூர்வாசியான) நான் மக்காவில் இருக்கும் போது இமாமுடன் தொழாமல் (தனித்துத் தொழுபவனாக) இருந்தால் எவ்வாறு தொழ வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களின் வழிமுறைப்படி இரண்டு ரக்அத்களாக (தொழுதுகொள்ளுங்கள்)'' என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1226 ஹஃப்ஸ் பின் ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு பயணத்தில் என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இருந்தேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டி ருந்தனர். உடனே, "இவர்கள் என்ன செய்கி றார்கள்?'' என்று கேட்டார்கள். "கூடுதலான தொழுகைகளைத் தொழுதுகொண்டிருக் கிறார்கள்'' என்று நான் பதிலளித்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "(பயணத்தில்) கூடுதலான தொழுகைகளை நான் தொழுபவனாக இருந்தால் எனது (கடமையான) தொழுகையை முழுமைப்படுத்தியிருப்பேன். என் சகோதரர் (ஆஸிமின்) மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கி றேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (வேறெந்த முன், பின் சுன்னத்களையும்) தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்).

நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். (பயணத்தில்) அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). நான் உமர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழுததில்லை. அவரகளின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).5 அல்லாஹ்வோ, "அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' (33:21) என்று கூறுகின்றான்'' என்றார்கள்.6

1227 ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (முன் பின் சுன்னத்களான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழுவதை நான் பார்த்ததேயில்லை. நான் (பயணத்தில்) உபரியான தொழுகைகளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) முழுமைப்படுத்தியிருப்பேன். உயர்ந்தோன் அல்லாஹ்வோ, "அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' (33:21) என்று கூறுகின்றான்'' என்றார்கள்.

1228 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள்.7

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1229 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதேன்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் அவர்களுடன் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1230 யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூன்று மைல்' அல்லது "மூன்று ஃபர்ஸக்தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று பதிலளித்தார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே ("மூன்று மைல்கள்' அல்லது "மூன்று ஃபர்ஸக்' என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1231 ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் (அது பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன். உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்'' என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1232 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "இப்னுஸ் ஸிம்த் (அவர்களுடன் புறப்பட்டேன்...)' என்று உள்ளது. ஷுரஹ்பீல் எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. மேலும் "அவர் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள ஹிம்ஸ் நாட்டின் "தூமீன்' எனும் பகுதிக்குச் சென்றார்கள்' என்று (அதிகப்படியாக) இடம்பெற்றுள்ளது.

1233 யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். அவர்கள் திரும்பி வரும்வரை (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்'' என்று கூறினார்கள். உடனே நான் (அனஸ் (ரலி)  அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?'' என்று கேட்டேன். அதற்குப் "பத்து (நாட்கள்)' என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.9

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

- அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "நாங்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம்...'' என்று ஹதீஸ் தொடங்குகிறது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம்' எனும் குறிப்பு இல்லை.

பாடம் : 2

மினாவில் சுருக்கித் தொழுதல்10

1234 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா உள்ளிட்ட இடங்களில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (அவ்வாறே தொழுவார்கள்). உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். பின்னர் அன்னார் (சுருக்கித் தொழாமல்) முழுமை யாகவே தொழுதார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.         அவற்றில் "மினாவில்' என்றே இடம்பெற்றுள்ளது. "அது உள்ளிட்ட இடங்களில்' என்ற குறிப்பு இடம்பெறவில்லை.

1235 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களும், அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் (இரண்டு ரக்அத்களே தொழுதனர்). பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.11

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மினாவில்) இமாமைப் பின்பற்றித் தொழுதால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; தனியாகத் தொழும்போது (சுருக்கி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1236 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில், பயணத்திலி ருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). உஸ்மான் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) "எட்டு ஆண்டுகள்' அல்லது "ஆறு ஆண்டுகள்' (அவ்வாறே தொழுதார்கள்).

(இதன் அறிவிப்பாளரான) ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (அவ்வாறு) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) முழுமைப்படுத்தியிருப்பேன்'' என்று சொன்னார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "மினாவில்' என்ற குறிப்பில்லை. மாறாக, "பயணத்தில் (அவ்வாறு) தொழுதார்கள்'' என்றே காணப்படுகின்றது.

1237 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் (இரண்டு ரக்அத்களாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே  எங்களுக்குத் தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்துகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டபோது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்புபவர்களாய் உள்ளோம்) என்று கூறிவிட்டு, "நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். இப்போது நான் (உஸ்மான் (ரலி)  அவர்களுடன் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!'' என்று கூறினார்கள்.12

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1238 ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்புடனும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.13

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1239 ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத்) தொழுதேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக இருந்தார்கள்; அதாவது "விடைபெறும்' ஹஜ்ஜின்போது (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.14

முஸ்லிம் (ஆகிய நான்) கூறுகின்றேன்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்கள்.

பாடம் : 3

மழை நேரத்தில் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளலாம்.15

1240 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது "அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்' (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே

தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு "(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் "ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்'' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.16

1241 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பின் இறுதியில் "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்' என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது தொழுகை அறிவிப்பாளரிடம் "நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று அறிவிக்குமாறு கட்டளையிடுவார்கள்'' என்றும் குறிப்பிட்டார்கள்.

1242 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

            அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "லஜ்னான்' எனும் மலைப் பகுதியில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்'' என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்' என இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு முறை அறிவித்தார்கள். இரண்டாம் முறை அறிவித்ததாக அதில் குறிப்பு இல்லை.

1243 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தபோது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் விரும்பு கிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1244 அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்' (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!'' என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு  வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்).  நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)'' என்று கூறினார்கள்.17

1245 மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "சகதியுடைய ஒரு (மழை) நாளில் எங்களுக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்...'' என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஜுமுஆ பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. "என்னைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்தார்' என்பதற்குப் பின் "அதாவது நபி (ஸல்) அவர்கள்' என்று இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "அதாவது நபி (ஸல்) அவர்கள்' எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.

1246 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "மழை பெய்த ஒரு வெள்ளிக் கிழமை அன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய தொழுகை அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்தார்'' என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "சேற்றிலும் சகதியிலும் நீங்கள் நடந்துவருவதை நான் விரும்பவில்லை'' என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

1247 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அது மழை பெய்த ஒரு வெள்ளிக் கிழமை... என்னைவிடச் சிறந்தவர் -அதாவது நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறு செய்தார்கள்.

1248 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், மழை பெய்த வெள்ளிக் கிழமை அன்று இப்னு இப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியேற்கவில்லை என வுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 4

பயணத்தில் வாகனத்திலிருப்பவர், வாகனம் செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகளைத் தொழலாம்.18

1249 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (ஒட்டகத்தின் மீதமர்ந்தவாறு) ஒட்டகம் செல்லும் திசையை நோக்கிக் கூடுதலான (நஃபில்) தொழுகை தொழுபவர்களாக இருந்தார்கள்.

1250 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்து, அது செல்லும் திசையை நோக்கித் தொழுதுவந்தார்கள்.

1251 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்'' எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.

1252 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், அப்துல்லாஹ் பின் அல்முபாரக் மற்றும் இப்னு அபீசாயிதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், "பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்' (2:115) எனும் வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது'' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

1253 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கழுதையில் இருந்தவாறு தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.19

1254 சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ர-) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சியபோது (எனது வாகனத்தி-ருந்து) இறங்கி "வித்ர்' தொழுதேன். பிறகு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன். இப்னு உமர் (ர-) அவர்கள், "(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?'' என்று கேட்டார்கள். நான் "சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்தி-ருந்து) இறங்கி "வித்ர்' தொழுதேன்'' என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ர-) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம் (உள்ளது), அல்லாஹ்வின் மீதாணையாக!'' என்றேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுதிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.20

1255 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ர-) அவர்களும் இவ்வாறு செய்வார்கள்.

1256 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுவார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1257 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் இருந்தவாறு கூடுதல் (நஃபில்) தொழுகைகளைத் தொழுவார்கள்; அப்போது அவர்கள் எத்திசையை முன்னோக்கியிருப் பினும் சரியே! (அவ்வாறே) வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ள்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்.)

இதை சா-ம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1258 ஆமிர் பின் ரபீஆ (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

இதை அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

1259 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் சிரியாவி-ருந்து திரும்பியபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம்; "அய்னுத் தம்ர்' எனும் இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீதமர்ந்தவாறு (கூடுதலான தொழுகைகள்) தொழுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) வேறு திசை நோக்கி அமைந்திருந்தது. - இவ்விடத்தில் அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கிப்லாவுக்கு இடப் பக்கம் நோக்கி சைகை செய்துகாட்டினார்கள்.- அப்போது அவர்கüடம் நான் "நீங்கள் கிப்லா அல்லாத வேறு திசை நோக்கித் தொழுவதை நான் கண்டேனே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்'' என்று விடையüத்தார்கள்.22

பாடம் : 5

பயணத்தில் இரு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழலாம்.23

1260 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.

1261 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ர-) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (வானில்) செம்மேகம் மறைந்த பின் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்; "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்'' என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.

1262 இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.24

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1263 அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக

இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப் படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.25

1264 அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியி-ருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். பயணம் புறப்படு வதற்கு முன் சூரியன் உச்சியி-ருந்து சாய்ந்து விட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.26

1265 அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்துத் தொழ விரும்பினால், லுஹ்ர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம் வரும்வரைத் தாமதப்படுத்துவார்கள்; பிறகு லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள்.

1266 அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம்வரைத் தாமதப்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள்; மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து செம்மேகம் மறையும்போது தொழுவார்கள்.27

 

 

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 6

உள்ளூரிலேயே இரு தொழுகைகளைச் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதல்.

1267 இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்க வில்லை.

1268 இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (அவர்கள்) அச்ச நிலையிலோ பயணத்திலோ இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், "நீர் என்னிடம் கேட்டதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ர-) அவர்கüடம் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள் (எனவேதான் இவ்வாறு செய்தார்கள்)' என விடையüத்தார்கள்'' என்றார்கள்.

1269 இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்காக மேற்கொண்ட பயணத்தின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

இதன் அறிவிப்பாளரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ர-) அவர்கüடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸஸ்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்'' என விடையüத்தார்கள்.

1270 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

1271 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஆத் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்'' என விடையளித்தார்கள்.

1272 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)'' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?'' என்று கேட்கப்பட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின்

தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்'' என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.

1273 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத் (கொண்ட லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்; ஏழு ரக்அத் (கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை) களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம்), "அபுஷ் ஷஅஸா அவர்களே! நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்'' என்றேன். அதற்கு "நானும் அவ்வாறே எண்ணுகிறேன்'' என்று விடையளித்தார்கள்.

1274 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும், மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் தொழுதார்கள்.

1275 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு எங்களிடையே (நீண்ட) உரையாற்றினார்கள். எந்த அளவிற்கென்றால் (வானில்) சூரியன் மறைந்து நட்சத்திரங்கள் தோன்றிவிட்டன. மக்கள் "தொழுகை, தொழுகை' என்று கூறலாயினர். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து (நின்ற இடத்தைவிட்டும்) நகராமல் இடையறாமல் தொடர்ந்து "தொழுகை தொழுகை' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீ எனக்கு நபிவழியைக் கற்றுத் தருகிறாயா, தாயற்றுப் போவாய்!'' என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழுததை நான் பார்த்தேன்'' என்று குறிப்பிட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு என் மனதில் இலேசான ஐயம் எழுந்தது. உடனே நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள்.

1276 அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)' என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் "தொழுகை(க்கு நேரமாகி விட்டது)' என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் "தொழுகை(க்கு நேரமாகி விட்டது)' என்று கூறினார். அப்போதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு "தாயற்றுப் போவாய்! எங்களுக்கே தொழுகைகளைக் கற்றுத் தருகிறாயா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுபவர்களாக இருந்தோம்'' என்று கூறினார்கள்.28

பாடம் : 7

தொழுது முடித்த பின் வலப் பக்கமும் திரும்பலாம்; இடப் பக்கமும் திரும்பலாம்.29

1277 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுது முடித்ததும்) வலப் பக்கம் திரும்புவதே கடமை என்று எண்ணிக்கொள்வதன் மூலம் உங்களில் எவரும் தம்மிடம் ஷைத்தானுக்குச் சிறிதும் இடமளித்துவிட வேண்டாம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) பெரும்பாலும் தமது இடப் பக்கம் திரும்புவதையே நான் பார்த்திருக்கிறேன்.30

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1278 சுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நான் தொழுது முடித்ததும் எப்படித் திரும்ப வேண்டும்? என் வலப் பக்கத்திலா? அல்லது இடப் பக்கத்திலா?'' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "என்னைப் பொறுத்த வரை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவதையே அதிகமாகக் கண்டேன்'' என்று கூறினார்கள்.

1279 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவார்கள்.

இதை சுத்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 8

இமாமுக்கு வலப் பக்கம் நிற்பது விரும்பத் தக்கதாகும்.

1280 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, "ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது "தஜ்மஉ') இபாதக்க' (இறைவா! உன் அடியார்களை "உயிர் கொடுத்து எழுப்பும்' (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "எங்களை நோக்கித் திரும்புவார்கள்' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 9

முஅத்தின் (இகாமத் சொல்லத்) தொடங்கிவிட்டால் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் எதையும் ஆரம்பிப்பது விரும்பத் தக்கதன்று.

1281 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1282 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது இந்த ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். ஆனால், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அவர்கள் குறிப்பிடவில்லை.

1283 அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?'' என்று கேட்டோம். அவர், "உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்' என்று கூறினார்கள் என்றார்.31

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் தந்தை மாலிக் அவர்களிடமிருந்தே அறிவித் தார்கள்.

அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் தம் தந்தை மாலிக் அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்பது தவறாகும்.

1284 இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:

சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?'' என்று கேட்டார்கள்.

1285 அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், "இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?'' என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் 10

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது என்ன சொல்ல வேண்டும்?

1286 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது "அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக' (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

இதை அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்:

அறிவிப்பாளர் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை நான் அறிவிப்பாளர் சுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் ஏட்டிலிருந்து எழுதினேன். அதில் சுலைமான் (ரஹ்) அவர்கள் "யஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) அவர்கள் "அபூஹுமைதும் அபூஉசைதும் அறிவித்தனர்' என்றே எனக்குச் செய்தி எட்டியது'' என்று குறிப்பிட்டிருந்தார்கள். (அபூஹுமைத் (ரலி) அல்லது அபூஉசைத் (ரலி)  அவர்கள் என்று ஐயப்பாட்டுடன் இடம்பெற வில்லை.)

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 11

(பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும்) பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும்; அதைத் தொழுவதற்கு முன் அமர்வது விரும்பத் தகாதது ஆகும்; எல்லா நேரங்களிலும் அதைத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

1287 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1288 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அமர்ந்திருந்தார்கள். எனவே, நானும் அமர்ந்துவிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அமருவதற்கு முன் ஏன் இரண்டு ரக்அத்கள் தொழவில்லை?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்களும் அமர்ந்திருந்தீர்கள்; மக்களும் அமர்ந்திருந்தார்கள் (எனவேதான் நானும் அமர்ந்துவிட்டேன்)'' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்!'' என்று கூறினார்கள்.

1289 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை அவர்கள் எனக்குத் தந்தார்கள்; மேலதிகமாகவும் தந்தார்கள். பள்ளிவாசலில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!'' என்று கூறினார்கள்.33

பாடம் : 12

பயணத்திலிருந்து திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்க தாகும்.

1290 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள். அவர்கள் மதீனாவிற்குத் திரும்பியபோது, நான் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டுமென என்னைப் பணித்தார்கள்.

1291 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தபோது) எனது ஒட்டகம் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அது களைத்துப்போயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு முன்னால் (மதீனா) சென்றுவிட்டார்கள். நான் காலை நேரத்தில் (மதீனாவிற்குச்) சென்று பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலின் நுழைவாயிலில் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்போதுதான் வருகிறீரா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். "உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் சென்று (இரண்டு ரக்அத்கள்) தொழுதுவிட்டுப் பிறகு திரும்பினேன்.34

1292 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் (ஊர்) திரும்புவார்கள். அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு பள்ளிவாசலில் அமருவார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 13

முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவது விரும்பத் தக்கதாகும்; அதில் குறைந்த பட்ச அளவு இரண்டு ரக்அத்களும், அதிக பட்சம் எட்டு ரக்அத்களும், நடுத்தர அளவு நான்கு அல்லது ஆறு ரக்அத் களுமாகும்; அதைப் பேணித் தொழுது வருமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.35

1293 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவார்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் தவிர!'' என்று கூறினார்கள்.

இதை சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1294 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுவார்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் தவிர!'' என்று கூறினார்கள்.

இதை கஹ்மஸ் பின் அல்ஹசன் அல்கைஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1295 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹாத் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆனால், நான் அதைத் தொழுது வருகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில (கூடுதலான) வழிபாடுகளைச் செய்ய விருப்பம் கொண்டிருந்தாலும்கூட, அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவதுண்டு. (எங்கே தாம் செய்வதைப் போன்று) மக்களும் அவற்றைச் செய்ய, மக்கள்மீது அவை கடமையாக்கப்பட்டுவிடுமோ எனும் அச்சமே இதற்குக் காரணம்.36

1296 முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு "நான்கு ரக்அத்கள் (தொழுவார்கள்); நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள்'' என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.37

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

யஸீத் அர்ரிஷ்க் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ் நாடிய அளவு (கூடுதலாகவும் தொழுவார்கள்)'' என்று இடம்பெற்றுள்ளது.

1297 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள்.

இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1298 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் (ளுஹா) தொழுததைப் பார்த்தாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும்

எனக்கு அறிவிக்கவில்லை. "நபி (ஸல்)

அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்திற்கு வந்து எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அதைவிடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், ருகூஉவையும் சஜ்தாவையும் பரிபூரணமாகச் செய்தார்கள்'' என உம்முஹானீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.38

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒருபோதும்' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

1299 அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ளுஹாத் தொழுததாக அறிவிக்கும் யாரேனும் ஒருவரை நான் கண்டால் அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தேன். ஆனால், அவ்வாறு அறிவிக்கும் எவரும் எனக்குக் கிடைக்க வில்லை. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபின் மகள் உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர. உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் (எனது இல்லத்திற்கு) வந்தார்கள்; அவர்களிடம் ஒரு துணி கொண்டுவரப்பட்டு அவர்களைச் சுற்றி திரையிடப்பட்டது; அவர்கள் குளித்தார்கள். பிறகு (தொழுகைக்குத் தயாராகி) நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அவர்களது நிற்றல் மிக நீளமானதாக இருந்ததா, அல்லது ருகூஉ, அல்லது சஜ்தா மிக நீளமானதாக இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இவற்றில் ஒவ்வொன்றுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே அமைந்திருந்தன. ஆனால், அவர்கள் அதற்கு முன்போ அதற்குப் பின்போ ளுஹாத் தொழுததை நான் கண்டதில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிபபாளர்தொடர்களில் வந்துள்ளது.

1300 உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள், "யார் அது?'' எனக் கேட்டார்கள். அதற்கு "நான் உம்முஹானீ பின்த் அபீதாலிப்'' என்றேன். "உம்மு ஹானியே வருக!'' என்று சொன்னார்கள். குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (இரு தோள்கள்மீது) மாற்றிப் போட்டுக்கொண்டு எட்டு ரக்அத்கள் (ளுஹா) தொழுதார்கள்; தொழுது முடித்ததும் நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை - ஹுபைரா மகன் இன்னாரை - என் தாயின் புதல்வர் (-என் சகோதரர்) அலீ பின் அபீதாலிப் கொல்லப் போவதாகக் கூறுகிறார்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முஹானியே! நீங்கள் அபயம் அளித்த வருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம் (ஆகவே, கவலை வேண்டாம்)'' என்று கூறி னார்கள். (நான் நபி  (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் வேளையாக இருந்தது.39

1301 உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (முற்பகல் நேரத்தில்) எனது வீட்டில் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அப்போது ஒரே ஆடையை (தம்மீது) சுற்றிக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் (தோள்கள்மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

1302 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி'யும் (-லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.

 

 

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1303 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத்கள் ளுஹாத் தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை எனக்கு அறிவுறுத்தினார்கள்.40

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "என் உற்ற தோழர் அபுல்காசிம் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களை எனக்கு அறிவுறுத்தினார்கள்'' என ஹதீஸ் தொடங்குகிறது.

1304 அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் நேசர் (நபி-ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹாத் தொழுவது, வித்ர் தொழாமல் உறங்கலாகாது ஆகிய மூன்று விஷயங்களை நான் வாழ்நாளில் ஒருபோதும் கைவிடக் கூடாது என எனக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 14

ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும்; அவற்றைச் சுருக்கமாகவும் தவறாமலும் தொழுதுவருமாறு வந்துள்ள தூண்டுதலும், அவ்விரு ரக்அத்களில் ஓத வேண்டிய விரும்பத் தகுந்த அத்தியாயங்களும்

1305 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹுத் தொழுகைக்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1306 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) மட்டுமே தொழுவார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1307 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வைகறை (ஃபஜ்ர்) வெளிச்சம் வந்த பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

1308 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வைகறை உதயமாகிவிட்டால்...' என்று ஹதீஸ் தொடங்குகிறது.

1309 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.42

1310 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள். எந்த அளவிற்கென்றால், "அதில் அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார்களா (இல்லையா)' என்று நான் கூறிக்கொள்வேன்.

இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.43

1311 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அவ்விரு ரக்அத்களிலும் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுகிறார்களா (இல்லையா) என்று நான் கூறிக் கொள்வேன். (அந்த அளவிற்கு அவற்றைச் சுருக்கமாகத் தொழுவார்கள்.)

1312 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்கு முன் தொழும் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) அளவிற்கு வேறு

எந்தக் கூடுதலானத் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்ததில்லை.

இதை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44

1313 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்பு தொழும் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) அளவிற்கு வேறு எந்தக் கூடுதலானத் தொழுகையையும் அதிவிரைவாக (மிகச் சுருக்கமாக)த் தொழுததை நான் பார்த்ததில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1314 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1315 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரத்தில் தொழும் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கூறுகையில், "அவ்விரண்டு ரக்அத்களும் உலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் விருப்பமானவையாகும்'' என்று கூறினார்கள்.

1316 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்' (என்று தொடங்கும் 109ஆவது) அத்தியாயத்தையும், "குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1317 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் முதலாவது ரக்அத்தில் "அல்பகரா' அத்தியாயத் திலுள்ள "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா...' (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், இரண்டாவது ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்' (என்று முடியும் 3:52ஆவது வசனத்தையும்) ஓதுவார்கள்.

1318 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத் திலுள்ள) "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா...' (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) "ஆலு இம்ரான்' அத்தியாயத்திலுள்ள "தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்...' (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள்.

- மேற்கண்ட (1317ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 15

கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் தொழ வேண்டிய வாடிக்கையான சுன்னத் தொழுகைகளின் சிறப்பும், அவற்றின் எண்ணிக்கையும்.

1319 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.45

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.

அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

1320 மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

1321 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்' அல்லது "அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது'.

இதன் அறிவிப்பாளரான நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்முஹபீபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இ(தை நான் செவியுற்ற)தன் பிறகு நான் அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை (தவறாமல்) தொழுதுவருகிறேன்.

அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(தை நான் செவியேற் ற)தன் பிறகு அந்தப் பன்னிரண்டு ரக்அத்களைத் (தவறாமல்) தொழுதுவருகிறேன்.

இவ்வாறே அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம்  (ரஹ்) அவர்களும் கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "ஒரு முஸ்லிமான அடியார் செம்மையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு நாளும் (கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள்) தொழுதால்...'' என்று ஹதீஸ் தொடங்குகிறது.

1322 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் (சுன்னத்) தொழுதேன்.

மஃக்ரிப், இஷா மற்றும் ஜுமுஆ (ஆகியவற்றின் சுன்னத்) தொழுகைகளை நபி (ஸல்) அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே தொழுதேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 16

கூடுதலான (நஃபில்) தொழுகைகளை நின்றும் உட்கார்ந்தும் தொழலாம்; (ஒரே நஃபில் தொழுகையில்) சில ரக்அத்களை நின்றும் சில ரக்அத்களை உட்கார்ந்தும் நிறைவேற்றலாம்.

1323 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள்; ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

1324/1325 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் (நஃபில்) தொழுவார்கள். நின்று தொழும்போது நின்ற நிலையிலிருந்தே ருகூஉச் செய்வார்கள். உட்கார்ந்து தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1326 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பாரசீகத்தில் நோய் கண்டிருந்தபோது உட்கார்ந்தே தொழுதுகொண்டிருந்தேன். எனவே, (மதீனா வந்தபோது) அது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்...'' என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறினார்கள்.

1327 அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நின்ற நிலையிலிருந்தே ருகூஉச் செய்வார்கள்; உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்'' என்று கூறினார்கள்.

1328 அப்துல்லாஹ் பின் ஷகீக் அல்உகைலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக நின்றும் தொழுதிருக்கி றார்கள்; உட்கார்ந்தும் தொழுதிருக்கிறார்கள். நின்று தொழ ஆரம்பித்தால் நின்ற நிலையிலி ருந்தே ருகூஉக்குச் செல்வார்கள். உட்கார்ந்து தொழ ஆரம்பித்தால் உட்கார்ந்த நிலையிலேயே ருகூஉச் செய்வார்கள்'' என்று கூறினார்கள்.

1329 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமை அடையும்வரை) இரவுத் தொழுகையில் ஒருபோதும் உட்கார்ந்து ஓதித் தொழுததை நான் பார்த்ததில்லை; முதுமையடைந்த பின்னர் உட்கார்ந்தவாறே ஓதித் தொழுதார்கள்; ஓத வேண்டிய அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள். பிறகு (நிலையிலிருந்து) ருகூஉச் செய்வார்கள்.46

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1330ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது முதுமைக் காலத்தில்) உட்கார்ந்தபடியே தொழுவார்கள்; அப்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் அளவுக்கு எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள்; பிறகு ருகூஉம் சஜ்தாவும் செய்வார்கள்; இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார்கள்.

இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1331 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையில் நஃபில்) தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று (சாதாரணமாக) ஒருவர் நாற்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு ஓதுவார்கள் (பிறகு ருகூஉச் செய்வார்கள்).

இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1332 அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழும்போது என்ன செய்வார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு "அவ்விரு ரக்அத்களிலும் குர்ஆன் வசனங்களை (அமர்ந்தபடி) ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று, பின்னர் ருகூஉச் செய்வார்கள்'' என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

1333 அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதிருக்கி றார்களா?'' என்று கேட்டேன். அதற்கு "ஆம். அவர்கள் முதுமை அடைந்த பிறகு'' என்று விடையளித்தார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1334 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அதிகமாக உட்கார்ந்தே தொழும் நிலை ஏற்பட்ட பிறகே இறந்தார்கள்.

இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1335 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதுமையடைந்து அவர்களது உடல் சதை போட்ட பிறகு அதிகமாக உட்கார்ந்தே தொழுதார்கள்.

இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1336 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந் நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து   தொழலானார்கள்; அப்போது ஓர் அத்தியாயத்தை (ஓதினால் வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் ஓதும் சிறிய அத்தியாயம்கூட குர்ஆனிலுள்ள) நீளமான அத்தியாயங்களில் ஒன்றைப் போன்றாகிவிடும்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஓராண்டுக்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு (முன்புவரை இந்நிலை நீடித்தது)'' எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

1337 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழும் நிலை ஏற்பட்ட பிறகே இறந்தார்கள்.

இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

1338 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு'' என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அப்போது அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு' எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுதுகொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்லன்'' என்று கூறினார்கள்.48

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா (ரஹ்) என்பவர் "அபூயஹ்யா அல்அஃரஜ்' ஆவார் என ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது.

பாடம் : 17

இரவுத் தொழுகையும், இரவில் நபி

(ஸல்) அவர்கள் தொழுத ரக்அத்களின் எண்ணிக்கையும், வித்ர் தொழுகை (குறைந்தது) ஒரு ரக்அத்தாகும்;

ஒரு ரக்அத்தும் ஒரு முழுமையான தொழுகையே என்பதும்.

1339 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும்வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர் வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

1340 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -"அல்அத்தமா' என மக்கள் அழைக்கும்- இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் சலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் தொழுகைக்கு அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, (தம்மைத் தொழுகைக்கு அழைப்பதற்காக) அறிவிப்பாளர் வரும் போது எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக (தம்மை அழைக்க) அறிவிப்பாளர் வரும்வரை வலப் பக்கத்தின் மீது சாய்ந்து படுத்திருப்பார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஹர்மலா (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் "வைகறை வெளிச்சம் பளிச்சிட்டி ருக்க, அறிவிப்பாளர் வரும்போது' என்பதும், "தொழுகையை நிறைவேற்றுவதற்காக' எனும் குறிப்பும் இடம்பெறவில்லை. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.

1341 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள்; அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1342 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள்.

1343 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினோரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை! பிறகு மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை'' என விடையளித்தார்கள்.49

1344 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விடையளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்; (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ர் தொழுவார்கள்; பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூஉச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வநதுள்ளது.

அவற்றில், "ஒன்பது ரக்அத்கள் நின்ற நிலையில் தொழுவார்கள். அவற்றில் (மூன்று ரக்அத்) வித்ராகத் தொழுவார்கள்'' என்று (ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது.

1345 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அம்மா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி எனக்குச் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இரவுத் தொழுகை ரமளானிலும் ரமளான் அல்லாத மற்ற மாதங்களிலும் பதிமூன்று ரக்அத்களாகவே இருந்தன; அவற்றில் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களும் அடங்கும்'' என்று பதிலளித்தார்கள்.

1346 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்; ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக, இவை பதிமூன்று ரக்அத்களாகும்.

இதைக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50

1347 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு அதன் இறுதிப் பகுதியில் விழித்திருப்பார்கள். பிறகு தம் வீட்டாரிடம் தமக்கு ஏதேனும் தேவையிருப்பின் (அவர்களிடம் சென்று) தமது தேவையை நிறைவேற்றுவார்கள்; பிறகு உறங்குவார்கள். முதல் பாங்கின் சப்தம் கேட்டதும் துள்ளி எழுந்து - அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, (சாதாரணமாக) "எழுந்து' என்று கூறவில்லை- தம்மீது தண்ணீர் ஊற்றுவார்கள். -அல்லாஹ்வின் மீதாணையாக! "இவ்வாறுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, (சாதாரணமாகக்) "குளித்தார்கள்' என்று கூறவில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் கூறினார்கள் என்பதை நான் அறிவேன்- பெருந்துடக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.51

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1348 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் தொழுகையில் இறுதித் தொழுகை வித்ராகவே இருக்கும்.

இதை அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1349 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (விருப்பத்திற்குரிய) நற்செயல் குறித்துக் கேட்டேன். அதற்கு, "அவர்கள் நிரந்தரமாகச் செய்யப்படும் நற் செயலை விரும்புவார்கள்'' என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) எந்த நேரத்தில் தொழுவார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சேவல் கூவும் சப்தத்தைக் கேட்கும்போது (இரவின் இறுதிப் பகுதியில்) எழுந்து தொழுவார்கள்'' என விடையளித்தார்கள்.52

1350 (நபி (ஸல்)  அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எனது வீட்டில்' அல்லது "என்னிடம்' தங்கியிருக்கும் நாளில் அவர்கள் உறங்கிய நிலையில் தவிர, பின்னிரவு நேரம் அவர்களை அடைந்ததில்லை.

இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53

1351 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக்கொண்டி ருப்பார்கள்; இல்லாவிடில் (ஃபர்ள் தொழுகைக்கு அழைக்கும்வரை) சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

இதை அபூசலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1352 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவார்கள்; (அப்போது நான் உறங்கிக்கொண்டிருப்பேன்.) அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது, "ஆயிஷா! எழுந்து வித்ரு தொழு!'' என்று கூறுவார்கள்.

இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1353 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதுகொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு முன்னால்

குறுக்கே படுத்துக்கொண்டிருப்பேன். அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகையை முடித்துவிட்டு) வித்ர் மட்டும் எஞ்சி இருக்கும்போது என்னை எழுப்பிவிடுவார்கள்; நான் (எழுந்து) வித்ர் தொழுவேன்.

இதைக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1354 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் எல்லாப் பகுதியிலும் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள்; (சில சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் (அதிகாலை முந்)நேரம் வரை சென்றுவிடும்.

இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1355 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் - ஆரம்பப் பகுதி, நடுப் பகுதி, இறுதிப் பகுதி என - எல்லாப் பகுதிகளிலும் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள்; (சில சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் (அதிகாலை முந்)நேரம் வரை சென்றுவிடும்.

இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1356 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவின் அனைத்துப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுதிருக்கிறார்கள்; (சில சமயங்களில்) அவர்களின் வித்ர் தொழுகை இரவின் இறுதிப் பகுதிவரை சென்றுவிடும்.55

இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 18

இரவுத் தொழுகையின் முழு விவரமும், இரவில் தொழாமல் உறங்கிவிடுதல் அல்லது நோயுற்றுவிடுதல் பற்றியும்.

1357 ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய விரும்பினார். இதையொட்டி மதீனாவுக்குச் சென்று, மதீனாவிலிருந்த தம் அசையாச் சொத்துகளை விற்றுவிட்டு அ(ந்தப் பணத்)தை (போருக்குத் தேவையான) ஆயுதங்கள், குதிரைகள் ஆகியவற்றில் போட்டு, ரோம பைஸாந்தியர்களுடன் இறக்கும்வரை போரிட விரும்பினார். இதற்காக அவர் மதீனா வந்த போது மதீனாவாசிகளில் சிலரைச் சந்தித்தார். அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருந்த காலத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவினர் இவ்வாறு (முற்றும் துறந்து இறைவழியில் உயிர்த் தியாகம்) செய்ய விரும்பியபோது, அவர்களை அவ்வாறு செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததுடன் "என்னிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இல்லையா? (நான் என்ன இறைவழிப் போராட்டத்திற்காக முற்றும் துறந்துவிட்டா செல்கிறேன்?)' என்றும் நபியவர்கள் கேட்டார்கள்'' என்று கூறினர். மக்கள் இவ்வாறு கூறியதும் சஅத் (ரஹ்) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டிருந்த தம் மனைவியை மீட்டுக்கொண்டார். மனைவியை மீட்டுக்கொண்டதற்கு (சிலரை)ச் சாட்சியாக்கினார்.

பிறகு சஅத் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை குறித்து வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் உமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றி பூமியிலுள்ளவர்களிலேயே நன்கு அறிந்த ஒருவரை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரஹ்) "அவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஆயிஷா (ரலி) அவர்கள்தாம் அவர்; அவர்களிடம் நீர் சென்று இது பற்றிக் கேட்பீராக! பிறகு அவர்கள் கூறும் பதிலை என்னிடம் வந்து தெரிவிப்பீராக!'' என்றார்கள்.

சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நடந்தேன். (அதற்கு முன்) ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்ல என்னுடன் வருமாறு  அன்னாரை அழைத்தேன். அதற்கு ஹகீம் பின் அஃப்லஹ்  (ரஹ்) அவர்கள், "நான் ஆயிஷா (ரலி) அவர்களை நெருங்கும் நிலையில் இல்லை. ஏனெனில், (மக்கள் அரசியல் குழப்பங்களால் இரு வேறு பிரிவினராகப் பிரிந்துள்ள இந்நிலையில்) இவ்விரு பிரிவினருக்கிடையே நீங்கள் எதுவும் கூற வேண்டாமென அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டார்கள்'' என்றார்கள்.

நான் ஹகீம் (ரஹ்) அவர்களை அறுதியிட்டு அழைத்ததன் பேரில் அன்னார் வந்தார்கள். நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி நடந்தோம். அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதியளித்தவுடன் நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஹகீம் பின் அஃப்லஹ் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு "ஹகீம்தானே?'' என்று கேட்டார்கள். ஹகீம் அவர்கள், "ஆம்' என்றார்கள். "உம்முடன் இருப்பவர் யார்?'' எனக் கேட்டார்கள். அதற்கு ஹகீம் அவர்கள் "ஹிஷாமின் புதல்வர் சஅத்'' என்று பதிலளித்தார்கள். "எந்த ஹிஷாம்?'' என்று கேட்டார்கள் ஆயிஷா. "ஆமிர் (ரலி) அவர்களின் புதல்வர்'' என்றார் ஹகீம். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ஆமிருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக எனப் பிரார்த்தித்துவிட்டு, அவர் குறித்து நல்லவற்றைக் கூறினார்கள்.

-அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆமிர் (ரலி) அவர்கள் உஹுதுப் போரில் உயிர் நீத்தவர் ஆவார்-

நான் (-சஅத்) "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!'' எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நீர் குர்ஆனை ஓதவில்லையா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கி றேன்)' என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள்,

"நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது'' என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். பின்னர் எனக்கு ஏதோ தோன்ற, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கூறுங்கள்'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீர் யா அய்யுஹல் முஸ்ஸம்மில்...'' (எனத் தொடங்கும் 73ஆவது) அத்தியாயத்தை ஓதியதில்லையா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)' என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களின் மூலம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஒரு வருட காலம் நின்று தொழுதனர். அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரை அல்லாஹ் பன்னிரண்டு மாதங்கள் வானிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டான். பின்னர் அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரில் அல்லாஹ் சலுகையை அறிவித்தான். எனவே, கடமையாக இருந்த இரவுத் தொழுகை பின்னர் கூடுதல் தொழுகையாக மாறிற்று'' என்று கூறினார்கள்.

நான், "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுமையடைந்து உடலில் சதை போட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக ஏழு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்களில் முன்பு செய்ததைப் போன்றே செய்வார்கள். அருமை மகனே! இவை ஒன்பது ரக்அத்கள் ஆகும்.

(பொதுவாக) நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதையே விரும்புவார்கள். இரவுத் தொழுகைக்கு எழ முடியாதபடி உறக்கமோ நோயோ மிகைத்துவிட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழு(து அதை ஈடு செய்)வார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனையும் ஒரே இரவில் ஓதியதாகவோ, காலைவரை இரவு முழுக்கத் தொழுததாகவோ, ரமளான் அல்லாத மாதங்களில் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்'' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் அறிவித்தேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது உண்மையே. நான் "அவர்களை நெருங்குபவனாயிருப்பின்' அல்லது "அவர்களிடம் செல்பவனாயிருப்பின்'அவர்களிடம் சென்று இந்த ஹதீஸை நேரடியாக அவர்களிடமே கேட்டிருப்பேன்'' என்றார்கள். (அப்போதைய அரசியல் குழப்பமே அன்னார் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்காமல் இருந்ததற்குக் காரணம்.) நான், "நீங்கள் அவர்களிடம் செல்லமாட்டீர்கள் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி உங்களிடம் அறிவித்திருக்கமாட்டேன்'' என்றேன்.

- மேற்கண்ட ஹதீஸ் ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டுப் பிறகு தம் அசையாச் சொத்துகளை விற்பதற்காக மதீனா நோக்கி வந்தார்கள்'' என ஹதீஸ் தொடங்குகிறது.

- மேற்கண்ட ஹதீஸ்  மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினேன்'' என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், "ஹிஷாம் யார்?'' என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் "ஆமிரின் புதல்வர்'' என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "ஆமிர் ஒரு நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹுதுப் போரில் உயிர்நீத்தார்'' என்று குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதாவது: சஅத் பின் ஹிஷாம் என் அண்டை வீட்டாராய் இருந்தார். அவர் தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார். மேலும், "ஆயிஷா (ரலி) அவர்கள், "ஹிஷாம் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு சஅத் அவர்கள், "ஆமிர் (ரலி) அவர்களின் புதல்வர்'' என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் நல்ல மனிதராய்த் திகழ்ந்தார்; உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பங்கேற்று கொல்லப் பட்டார்' என்று கூறினார்கள். "ஹகீம் பின் அஃப்லஹ் (ரஹ்) அவர்கள் (இப்னு அப்பாஸ் (ரலி)  அவர்களிடம்) "நீங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் செல்லமாட்டீர்கள் என நான் அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி உங்களிடம் நான் அறிவித்திருக்கமாட்டேன்'' என்று கூறினார்கள்.

1358 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறிவிட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

இதை சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1359 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாகச் செய்வார்கள். அவர்கள் இரவில் உறங்கி விட்டாலோ, அல்லது நேய்வாய்ப்பட்டுவிட்டாலோ பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (இரவுத் தொழுகையை) சுப்ஹுவரை நின்று தொழுததை நான் கண்டதில்லை; ஒரு மாதம் முழுக்கத் தொடர்ச்சியாக அவர்கள் நோன்பு நோற்றதில்லை; ரமளான் மாதத்தில் தவிர.

1360 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதி வருபவற்றை, அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜ்ர் தொழுகைக்கும் லுஹ்ர் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு (நன்மை) எழுதப்படுகிறது.

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.56

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 19

சுடுமணலில் ஒட்டகக் குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரத்தில் தொழும் "அவ்வாபீன்' தொழுகை.57

1361 காசிம் பின் அவ்ஃப் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் "ளுஹா' தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கண்டார்கள். அப்போது "இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவதே சிறந்தது என இவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சுடுமணலில் ஒட்டகக் குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும்' எனக் கூறினார்கள்'' என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1362 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபாவாசிகளை நோக்கிச் சென்றார்கள். அப்போது குபாவாசிகள் (ளுஹா) தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது "சுடுமணலில் ஒட்டகக் குட்டியின் கால் குழம்புகள் கரியும் நேரமே "அவ்வாபீன்' தொழுகையின் நேரமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் காசிம் பின் அவ்ஃப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத் களாகும்; வித்ர் தொழுகை இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத்தாகும்.

1363 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் (வித்ர்) தொழட்டும்! (அவ்வாறு தொழுதால்) அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்'' என்று பதிலளித்தார்கள்.58

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1364 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை குறித்துக் கேட்டார். அதற்கு "(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுதுகொள் ளுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1365 அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?'' எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுதுகொள்ளுங்கள்!'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1366 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?'' என்று கேட்டார். -அப்போது நான் நபியவர்களுக்கும் கேள்வி கேட்டவருக்கும் இடையே இருந்தேன். -நபி (ஸல்) அவர்கள், "(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுது கொள்ளுங்கள்! உனது தொழுகையின் இறுதியாக வித்ரை அமைத்துக்கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள். ஓர் ஆண்டிற்குப் பிறகு அவர்களிடம் ஒரு மனிதர் (அவ்வாறே) கேட்டார். அப்போதும் நான் அதே இடத்தில் (இருவருக்குமிடையே) இருந்தேன். இ(ப்போது கேள்வி கேட்ட)வர் முன்பு கேள்வி கேட்ட மனிதர்தாமா, அல்லது வேறு மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை. -அவரிடமும் நபி (ஸல்) அவர்கள் முன்பு கேட்டவரிடம் கூறியதைப் போன்றே பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஓர் ஆண்டிற்குப் பிறகு ஒரு மனிதர் அவ்வாறு கேட்டது பற்றியும் அதற்குப் பிறகுள்ள குறிப்புகளும் இடம்பெறவில்லை.

1367 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுக்கு முன்பே விரைந்து வித்ர் தொழுதிடுவீர்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1368 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவில் தொழுபவர் இறுதியாக வித்ர் தொழட்டும். ஏனெனில், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1369 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களது கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1370 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவில் தொழுபவர் சுப்ஹுக்கு முன் தமது கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே மக்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்.

1371 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வித்ர் தொழுகை, இரவின் இறுதிப் பகுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத்தாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1372 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வித்ர் தொழுகை இரவின் இறுதிப் பகுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத்தாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1373 அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(வித்ர்) இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத்தாகும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்று விடையளித்தார்கள். அவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களிடமும் வினவினேன். அவர்களும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவின் இறுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத் ஆகும்' என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்'' என்று விடையளித்தார்கள்.

1374 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இரவுத் தொழுகையை எவ்வாறு ஒற்றைப்படையாக (வித்ராக) ஆக்குவேன்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இரவில்) தொழுபவர் இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதுவரட்டும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அவர் அறிந்தால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழட்டும்! முன்னர் அவர் தொழுதவற்றை அது ஒற்றைப்படையாக மாற்றிவிடும்'' என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இப்னு உமரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர்) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் என்றே இடம்பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் என்று வரவில்லை.

1375 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "காலைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்'' என்று கூறினார்கள். (உடனே) நான், " இதைப் பற்றி உங்களிடம் நான் கேட்கவில்லை'' என்றேன். அதற்கு அவர்கள், "நீர் ஒரு விளங்காத மனிதர்முழு ஹதீஸையும் சொல்ல என்னை விடமாட்டீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். காலைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (அவ்விரு ரக்அத்களிலும் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) இகாமத் சொல்லும் சப்தம் காதில் விழுவதைப் போன்று (சுருக்கமாகத் தொழுவார்கள்)'' என்று கூறினார்கள்.60

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "காலைத் தொழுகை' என்பதற்கு பதிலாக (வெறும்) "காலை' என்றே இடம்பெற்றுள்ளது.

1376 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்'' என்றும், "போதும்! போதும் (நிறுத்து!) நீர் ஒரு விளங்காத மனிதர்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

1377 உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்; நீங்கள் சுப்ஹு நேரத்தை அடைந்துவிட்டதாகக் கண்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழுதுகொள்ளுங்கள்!'' என்று சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இரண்டிரண்டு ரக்அத்கள் என்பதற்கு என்ன பொருள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் சலாம் கொடுப்பதாகும்'' என்று விளக்கமளித்தார்கள்.

1378 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சுப்ஹை அடைவதற்கு முன் வித்ர் தொழுங்கள்!

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1379 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹுக்கு முன் வித்ர் தொழுங்கள்!'' என்று கூறினார்கள்.61

பாடம் : 21

இரவின் இறுதியில் எழ முடியாது

என அஞ்சுவோர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதிட வேண்டும்.

1380 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதுவிடட்டும்! இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1381 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 22

தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று தொழுவதாகும்.62

1382 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

1383 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தொழுகையில் மிகவும் சிறந்தது எது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்'' என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 23

பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் ஒன்று இரவில் உண்டு.

1384 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு; சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான மனிதர் இம்மை மற்றும் மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இவ்வாறு ஒவ்வோர் இரவிலும் நடக்கிறது.63

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1385 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு. ஒரு முஸ்லிமான அடியார் சரியாக அந்த நேரத்தில் இறைவனிடம் எந்த நன்மையை வேண்டினாலும் இறைவன் அவருக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

பாடம் : 24

இரவின் இறுதி நேரத்தில் பிரார்த் திக்குமாறும் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுமாறும் வந்துள்ள ஆர்வமூட்

டலும் அந்த நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் ஏற்கப்படும் என்பதும்.

1386 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.64

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1387 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1388 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்'' என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1389 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், நடு இரவில் அல்லது இரவின் இறுதி மூன்றிலொரு பகுதியில் கீழ் வானிற்கு இறங்குகிறான். "என்னிடம் பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். அல்லது என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கி றேன்'' என்று கூறுகின்றான். பிறகு "(நான்) இல்லாதவனும் அல்லன்; (வாக்குமீறுவதன் மூலம்) அநீதி இழைப்பவனும் அல்லன். (இத்தகைய) எனக்கு (அழகிய) கடனளிப்பவர் யாரும் உண்டா?'' என்று அல்லாஹ் கேட்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகின்றேன்:

இந்த ஹதீஸின்  அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு மர்ஜானா என்பவர் சயீத் பின் அப்தில்லாஹ் ஆவார். மர்ஜானா என்பது, அவருடைய தாயாரின் பெயராகும்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "பிறகு உயர்வும் வளமும் மிக்க (இறை)வன் தன் கரங்களை விரித்தபடி "இல்லாத வனோ அநீதி இழைப்பவனோ அல்லாத (உங்கள் இறை)வனுக்கு (அழகிய) கடன் அளிப்பவர் யாரும் உண்டா?'' என்று கூறுவான் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

1390 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், இரவின் முதல் மூன்றிலொரு பகுதி கழியும்வரை தாமதித்துவிட்டுப் பின்னர் கீழ் வானிற்கு இறங்குகின்றான். "(என்னிடம்) பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? தவ்பாச் செய்பவர் எவரும் உண்டா? கேட்பவர் எவரும் உண்டா? பிரார்த்திப்பவர் எவரும் உண்டா?'' என அதிகாலை புலரும்வரை கேட்கின்றான்.

இதை அபூசயீத் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

இந்த ஹதீஸ் இவ்விரு நபித்தோழர்களிடமிருந்து தலா மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் தலா இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

இவ்வறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸைவிட மேற்கண்ட அறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸே முழுமையானதும் மிகுதியானதுமாகும்.

பாடம் : 25

ரமளானில் இரவில் நின்று வணங்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டலும், அதுவே தராவீஹ் தொழுகை என்பதும்.

1391 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.65

1392 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்றுவழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதன் மீது மக்களுக்கு ஆர்வமூட்டிவந்தார்கள். "எவர் நம்பிக்கை யோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்'' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது இதே நிலையே நீடித்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் இந்த நிலையே இருந்தது.

1393 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66

1394 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில்  நின்று வழிபட, அது லைலத்துல் கத்ராகவே அமைந்து விட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1395 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஓர் இரவில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு) மக்கள் திரண்டபோது அவர்களிடம் அல்லாஹ்

வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் "நீங்கள் செய்ததை நான் பார்த்(துக்கொண்டுதான் இருந்)தேன். இத் தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வரவிடாமல் என்னைத் தடுத்து விட்டது'' என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.67

1396 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது மக்களில் சிலரும் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) முந்திய நாளைவிட அதிகமானோர் திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது இரவு புறப்பட்டுவந்(து தொழுவித்)தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றி மக்கள் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவில் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதனர்.

நான்காம் நாள் இரவு வந்தபோது (மக்கள் அதிகரித்ததால்) பள்ளிவாசல் இடம்கொள்ளவில்லை. அன்றிரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை. மக்களில் சிலர் "தொழுகை' என்று (நினைவூட்டிக்) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் ஃபஜ்ர் தொழுகைக்குத்தான் சென்றார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் "அம்மா பஅத்' (இறை வாழ்த்துக்குப் பின்!) எனக் கூறிவிட்டு, "இரவில் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் உங்கள்மீது இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என நான் அஞ்சினேன் (ஆகவேதான், நேற்றிரவு நான் வரவில்லை)'' என்று கூறினார்கள்.68

1397 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்' என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது -இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் "அல்லாஹ் நாடினால்' என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்- அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்'' என்று கூறினார்கள்.69

1398 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவேயாகும் என்றே அநேகமாக நான் கருதுகிறேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் "அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' எனும் வார்த்தையில்தான் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார். மேலும், ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் நண்பர்களில் ஒருவர் அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து இச்செய்தியை எனக்கு அறிவித்தார்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவித்தது பற்றியும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம்பெறவில்லை.70

பாடம் : 26

இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும்.

1399 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவாமல், நடுநிலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள்.

நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக்கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத் தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ, நான் அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதிமூன்று ரக்அத்களுடன் முடித்துக்கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். உறங்கும்போது குறட்டைவிடுவது அவர்களது வழக்கமாகும். பினனர் பிலால் (ரலி) அவர்கள்

வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்:

அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ ஃபீ சம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழிம் லீ நூரா.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக.)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படுத்துமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அவர் அறிவித்தார்: என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக) எனக் கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்.71

1400 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையுமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலை வைத்துப்) படுத்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது சற்று பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தமது கரத்தால் முகத்தில் தடவித் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். செம்மையாக அங்கத் தூய்மை செய்துகொண்ட பின் தொழுவதற்காக நின்றார்கள்.

நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தமது வலப் பக்கத்தில் நிறுத்தி)னார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்.

பின்னர் தொழுகை அறிவிப்பாளர் வரும் வரை சாய்ந்து படுத்திருந்தார்கள். (அவர் வந்ததும்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது விட்டு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுக்கு) சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.72

1401 மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "பிறகு (தொங்கவிடப்பட்டிருந்த) பழைய தண்ணீர் பையை நோக்கிச் சென்று (அதைச் சரித்து) பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதைச் செம்மையாகச் செய்தார்கள். அதற்காகச் சிறிதளவு தண்ணீரே ஊற்றினார்கள். பிறகு என்னை அசைத்து (உசுப்பி)விட்டார்கள். நான் எழுந்தேன்...'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.

1402 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) உறங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் (தங்கி) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் பிறகு நின்று தொழுதார்கள். நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அந்த இரவில் அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டைவிட்டு உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டைவிடுவார்கள். பின்னர் அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் வந்தபோது புறப்பட்டுச் சென்று (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு) தொழு(வித்)தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இந்த ஹதீஸை நான் புகைர் பின் அல் அஷஜ்ஜு (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இவ்வாறே எனக்கு குறைப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள்.

1403 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) தங்கியிருந்தேன். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழும்போது என்னையும் எழுப்பிவிடுங்கள்!'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்த போது நான் எழுந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் கண்ணயரும் போது எனது காதின் சோனையைப் பிடித்(து என்னை விழிக்கச் செய்)தார்கள். அப்போது பதினோரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் கால்களை நட்டுவைத்துக் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தவாறே உறங்கினார்கள். அப்போது அவர்களின் குறட்டைச் சப்தத்தை நான் கேட்டேன். ஃபஜ்ர் நேரமானதும் (சுப்ஹு டைய சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுதார்கள்.

1404 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, கட்டித் தொங்க விடப்பட்டிருந்த தண்ணீர் பையிலிருந்து (தண்ணீரைச் சரித்து) சுருக்கமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அவர்கள் சிறிதளவு தண்ணீரில் சுருக்கமாகவும் சிக்கனமாகவும் அங்கத் தூய்மை செய்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சைகையால் வர்ணிக்கலானார்கள்.) நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே (அங்கத் தூய்மை) செய்துவிட்டு வந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னை(ப் பிடித்து)ப் பின்பக்கமாகக் கொண்டுவந்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தலானார்கள்; பிறகு தொழுதார்கள். பின்னர், படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் வந்து (சுப்ஹுத்) தொழுகைக்காக அவர்களுக்கு அறிவிப்புக் கொடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்று (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (உறங்கிய பின் புதிதாக அங்கத் தூய்மை செய்யாமல் தொழும்) இந்த முறை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியதாகும். ஏனெனில் "நபி (ஸல்) அவர்களின் கண்கள் மட்டுமே உறங்குகின்றன; உள்ளம் உறங்குவதில்லை'' என நமக்குச் செய்தி எட்டியுள்ளது.73

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1405 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எப்படித் தொழுகிறார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு உணவுத் தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவ