பாடம் : 1 - பாடம் : 25 அத்தியாம் 5_பாங்கு, தொ
பாடம் : 1
தொழுகை அறிவிப்பின் (பாங்கு) துவக்கம்2
618 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப் பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.3
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 2
தொழுகை அறிவிப்பு வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங் களை ஒற்றையாகவும் சொல்ல வேண்டும்.
619 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இகாமத்தில் சொல்லப்படும்) கத் காமத்திஸ் ஸலாஹ் என்ற வாசகத்தைத் தவிர என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. (இகாமத்தில் அந்த வாசகத்தை மட்டும் இரண்டு முறை கூற வேண்டும்.)
620 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய (அறிவிப்பு) முறையை உருவாக்குவது குறித்து (நபித்தோழர்கள்) பேசினார்கள். அப்போது சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர். (இவை யூத, கிறிஸ்தவக் கலாசாரம் என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.) இதையடுத்து தொழுகை அறிவிப்பு வாசகங்கள் இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்கள் ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.4
621 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது, தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிக்கும் முறை குறித்துப் பேசினார்கள். அவர்களில் சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர்.
622 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.5
பாடம் : 3
தொழுகை அறிவிப்பு முறை
623 அபூமஹ்தூரா (ரலி) அவர்கள்6 கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத்தந்தார்கள்:
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).7
(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).
பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.8
பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 4
ஒரே பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அறிவிப்பாôளர்களை ஏற்படுத்துவது விரும்பத் தக்கதாகும்.
624 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி) அவர்கள்; மற்றொருவர் கண்பார்வை இழந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.9
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 5
கண்பார்வையற்றவர் தொழுகை அறிவிப்புச் செய்வது செல்லும்; (தொழுகை நேரத்தை அறிந்து சொல்ல) அவருடன் கண்பார்வை உள்ள ஒருவர் இருந்தால்.
625 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு (டைய பள்ளிவாசலு)க்கு இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளராக இருந்தார்கள். அன்னார் கண் பார்வையற்ற வராவார். (அவருக்கு உதவியாளராக பிலால் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 6
(இஸ்லாமிய அரசின் துருப்புகள்) இணை வைப்பாளர்கள் வாழும் நாட்டில் (போருக்காகச் செல்லும்போது) அவர் களிடையே தொழுகை அறிவிப்பின் சப்தம் கேட்டால் அந்த மக்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.
626 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ர் நேரம் ஆரம்பிக்கும்போது போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந் தார்கள். (போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ர் தொழுகையின் அறிவிப்பு சப்தத்தை எதிர்பார்ததுக் கொண்டிருப்பார்கள். அப்படி தொழுகை அறிவிப்பு சப்தத்தைக் கேட்டால் போரை நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் தாக்குவார்கள்.
(ஒரு முறை) ஒரு மனிதர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லக் கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இயற்கையில் (-இஸ்லாத்தில்) இருக்கிறாய் என்று சொன்னார்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறிவிட்டாய் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் அவர் யாரென்று பார்த்தபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்று தெரிந்தது.
பாடம் : 7
தொழுகை அறிவிப்பை (பாங்கை)க் கேட்பவர், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே கூறுவதும் பின்பு நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் கூறி, அவர்களுக்குச் சொர்க்கத்தின் உயர்ந்த பதவி கிடைப்பதற்காகப் பிரார்த்திப்பதும் விரும்பத் தக்கதாகும்.
627 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை நீங்கள் செவியேற் றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10
628 நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது
யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ
அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
629 அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
630 அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (அஷ்ஹது (உறுதிமொழிகிறேன்) என்பதற்கு பதிலாக) வ அன அஷ்ஹது (நானும் உறுதிமொழிகிறேன்) என்று இடம்பெற்றுள்ளது.11
பாடம் : 8
தொழுகை அறிவிப்புச் செய்வதன் (பாங்கு) சிறப்பும், தொழுகை அறிவிப்பைக் கேட்கும் போது ஷைத்தான் வெருண்டோடுவதும்.
631 ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கி றேன் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
632 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் ரவ்ஹா எனும் இடம்வரை அவன் (வெருண்டோடிச்) சென்றுவிடுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் அ(ந்த ரவ்ஹா எனும் இடத்)தைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அது மதீனாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலை விலுள்ள ஓர் இடமாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
633 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகு தூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர் களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
634 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
635 சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) என் தந்தை (அபூஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். என்னுடன் எங்களுடைய அடிமை ஒருவரும் அல்லது எங்களுடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர் அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்கமாட்டேன். எனினும், (இது போன்ற) சப்தத்தை நீ கேட்டால் தொழுகை அறிவிப்பை நீ சப்தமாகக் கூறு. ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
636 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப் பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப்பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
637 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்பதற்கு பதிலாக) அந்த மனிதருக்குத் தாம் எப்படித் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்று இடம்பெற்றுள்ளது.12
பாடம் : 9
(தொழுகையின் தொடக்கத்தில் சொல்லப் படும்) தக்பீரத்துல் இஹ்ராம், ருகூஉவிற்குச் செல்லும்போதும் ருகூஉ விலிருந்து எழும்போதும் சொல்லப்படும் தக்பீர் ஆகியவற்றின்போது இரு கைகளையும் தோளுக்கு நேராக உயர்த்துவது விரும்பத் தக்கதாகும். சஜ்தாவிலிருந்து எழும்போது அவ்வாறு கைகளை உயர்த்தலாகாது.
638 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தம் தோள்களுக்கு நேராக தம்மிரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், ருகூஉ செய்வதற்கு முன்பும் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் (அவ்வாறு செய்வார்கள்). இரண்டு சஜ்தாக்களுக்கு மத்தியில் கைகளை உயர்த்தமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
639 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். சஜ்தாலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்.
640 மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்வார்கள்.13
641 அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித்தால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்லி தம்மிரு கைகளை உயர்த்துவதையும், அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும் தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துகொண்டி ருந்தார்கள் என்று கூறினார்கள்.14
642 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறும்போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.
643 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் தம்மிரு காதுகளின் கீழ் முனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன் என (மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.15
பாடம் : 10
தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூற வேண்டும். ருகூஉவிலிருந்து நிமிரும் போது மட்டும் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூற வேண்டும்.
644 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி)
அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும் போதும் அன்னார் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிந்ததும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்ற வன் நானே என்று கூறுவார்கள்.16
645 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் (ஆரம்பத்தில்) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூஉவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாவுக்காகச் சரியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தாவுக்குச் செல்லும்போதும், பின்னர் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்துவிட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள் என்று கூறினார்கள்.
பிறகு உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
646 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
ஆனால், உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அதில் இடம் பெறவில்லை.
647 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்த காலகட்டத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுவிக்கத் துவங்கும்போது தக்பீர் (தஹ்ரீம்) கூறுவார்கள் என்று தொடங்கி முந்தைய ஹதீஸைப் போன்றே (645) குறிப்பிட் டுள்ளார்கள்.
மேலும் இந்த அறிவிப்பில், தொழுது முடித்துவிட்டு சலாம் கொடுத்ததும் பள்ளி வாசலில் இருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்துகொண்டு என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.
648 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு முறை நிமிரும்போதும் குனியும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், அபூஹுரைரா! இது என்ன தக்பீர்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது என்று பதிலளித்தார்கள்
649 அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிவந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் அறிவிப்பார்கள்.
650 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் தாலிப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சியுடன்) எனது கையைப் பிடித்து
நமக்கு இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார் அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்திவிட்டார் என்று சொன்னார்கள்.17
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
பாடம் : 11
(தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது கட்டாயமாகும். ஒருவருக்கு அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை முறைப்படி ஓதத் தெரியாமலும் அதைக் கற்றுக்கொள்ள முடியாமலும் போனால் அவருக்குத் தெரிந்த இதர இறைவசனங்களை அவர் ஓதிக்கொள்ளலாம்.
651 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.18
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
652 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
653 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலி ருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.
654 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும்) அதற்கு மேலாகவும் ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
655 அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவுபெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலிலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுதுகொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ்,
என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம்
(அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். -(நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)-
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன்.
656 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
657 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
658 அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அப்துர் ரஹ்மான் பின் யஅகூப்-ரஹ்) அவர்களும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்களாக இருந்தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அவ்விருவரும் கூறினர்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தாகும். இதை மூன்று முறை கூறினார்கள்.
659 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகையே கிடையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமிட்டு ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமிட்டு ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமின்றி அமைதியாக ஓதுகிறோம்.19
660 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமிட்டு ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம் என்று கூறினார்கள்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், (தொழுகையில்) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)விடக் கூடுதலாக (எதையும்) நான் ஓதாமலிருந்தால்...? என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதைவிட அதிகமாக ஓதினால் அது உமக்குச் சிறந்ததாகும். அத்துடன் முடித்துக்கொண்டாலும் அது உமக்குப் போதுமானதாகிவிடும் என்று பதிலளித்தார்கள்.20
661 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம். ஒருவர் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) மட்டும் ஒதுவது போதுமானதாகும். அதைவிட அதிமாக ஓதுவது சிறப்பிற்குரியதாகும்.
662 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசரமாக அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் முறையாகத் தொழவில்லை என்று சொன்னார்கள்.
அந்த மனிதர் திரும்பிப்போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம் (உன் மீதும் சாந்தி நிலவட்டும்) என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர் சத்திய(மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் தொழுகைக்கு நின்றதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக என்று சொன்னார்கள்.21
663 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்குள் நுழைந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலின்) ஓர் ஓரத்தில் இருந்தார்கள்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில் நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கத் தூய்மை (உளூ) செய்வீராக. பிறகு கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறுவீராக என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.22
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 12
இமாமைப் பின்பற்றித் தொழக்கூடியவர் சப்தமாக (குர்ஆன் வசனங்களை) ஓதலாகாது.23
664 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை அல்லது அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (மிக்க மேலான உம்முடைய இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்று தொடங்கும் (குர்ஆனின் 87ஆவது) அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று) ஓதியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான்தான் (ஓதினேன்). நன்மையை நாடியே அவ்வாறு செய்தேன் என்றார். (பிறகு மக்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் (சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக நான் அறிந்தேன். (எனவே, உங்களில் எவரும் எனக்குப் பின்னால் நின்று தொழும்போது சப்தமாக ஓத வேண்டாம்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
665 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்று தொடங்கும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதலானாôர். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் (எனக்குப் பின்னால் நின்று சப்தமாக) ஓதியவர் யார்? அல்லது உங்களில் ஓதிக்கொண்டிருந்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான்தான் (ஓதினேன்) என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் (எனக்குப் பின்னால் சப்தமிட்டு) ஓதுவதன் மூலம் (என்னை ஓத விடாமல்) என்னுடன் அவர் தகராறு செய்வதாக எண்ணிவிட்டேன். (எனவே, உங்களில் யாரும் எனக்குப் பின்னால் நின்று சப்தமாக ஓத வேண்டாம்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
666 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுகை முடிந்ததும்) உங்களில் சிலர் (குர்ஆன் வசனங்களை சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக அறிந்தேன் (எனவே, உங்களில் யாரும் எனக்குப் பின்னால் நின்று சப்தமாக ஓத வேண்டாம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாடம் : 13
(தொழுகையில்) பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதலாகாது என்று கூறுவோரின் ஆதாரம்.24
667 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருடன் (அவர்களுக்குப் பின்னால் நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்களில் யாருமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை (சப்தமாக) ஓதியதை நான் கேட்ட தில்லை.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கி றார்கள்.25
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
668 கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஷுஅபா ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்:
நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், நீங்கள் இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம். அது குறித்து நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்(டுத் தெரிந்துகொண்)டோம் என்று பதிலளித்தார்கள்.
669 அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தொழுகையின் தொடக்கத்தில் தக்பீர் கூறிய பின்) சுப்ஹானக்கல்லாஹும்ம வ பி ஹம்திக்க, தபாரக்கஸ்முக்க, வ தஆலா ஜத்துக்க, வலா இலாஹ ஃகைருக்க என்று சப்தமிட்டுக் கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். உனது பெயர் சுபிட்சம் வாய்ந்தது. உனது பெருமை உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருக்குப் பின்னால் (நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று ஓதியே (தொழுகை யை) அரம்பித்துவந்தார்கள். அவர்கள் (அதை) ஓதுவதற்கு முன்போ, பின்போ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பாடம் : 14
பிஸ்மில்லாஹ் குர்ஆனிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்தின் முதல் வசனமாகும்; (9ஆவது அத்தியாயமான) பராஅத் (அத்தவ்பா) அத்தியாயத்தைத் தவிர என்று கூறுவோரின் ஆதாரம்.
670 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஉத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள், அது ஒரு (சொர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர் களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்.26
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள் என்பதற்கு பதிலாக) எங்களிடையே பள்ளிவாசலில் இருந் தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், (உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்பதற்கு பதிலாக) அந்த மனிதர் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அது ஒரு நதி. என்னுடைய இறைவன் சொர்க்கத்தில் அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் ஒரு நீர் தடாகம் உள்ளது என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது. ஆனால், அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
பாடம் : 15
(தொழுகையின் ஆரம்பத்தில்) தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்சுக்குக் கீழ் தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கைமீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும் (விரித்து) வைப்பதும் (விரும்பத் தக்கதாகும்).
671 வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள் இரு காதுகளுக்கு நேராக என்று விவரித்தார்கள்.-
பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பியபோது தம் கைகளை ஆடையிலி ருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தாச் செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(ளை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) சஜ்தாச் செய்தார்கள்.27
பாடம் : 16
தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது
672 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து தொழுகையில் (அமர்வில்) அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலா ஃபுலான் (அல்லாஹ்வுக்குச் சாந்தி உண்டாகட்டும்: இன்னாருக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், நிச்சயமாக அல்லாஹ்வே சலாம் (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையி(ன் இருப்பி)ல் அமர்ந்தால் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கை களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள நல்லடியார்கள் அனைவருக்கும் சலாம் கூறியதாகும். மேலும், அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறுங்கள். பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று சொன்னார்கள்.28
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
673 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
674 மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பிறகு நீங்கள் நாடியவற்றை அல்லது நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
675 மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்திருந்தால் என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. (அதன் இறுதியில்) பிறகு நீங்கள் (விரும்பிய) பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள லாம் என்று இடம்பெற்றுள்ளது.
676 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையே எனது கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள்
மற்ற அறிவிப்பாளர்கள் அத்தஹிய்யாத் (ஓதும் விதத்)தை அறிவித்திருப்பதைப் போன்றே இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும் அறிவித்துள்ளார்.
677 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயம் ஒன்றைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்கு (பின்வருமாறு) கற்றுத்தந்தார்கள்:
அத்தஹிய்யாத்துல் முபாரக்காத்துஸ் ஸலவாத்துத் தய்யிபாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் சுபிட்சங்களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் குர்ஆனைக் கற்பிப்பதைப் போன்று என இடம்பெற்றுள்ளது.
678 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகை இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்குக் கற்றுத் தருவார்கள்.
679 ஹித்தான் பின் அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி (நன்மை, தானதருமம் ஆகிய வற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூசா (ரலி) அவர்கள் தொழுகையை முடித்து சலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயி ருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட் டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந் தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள்.
அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (-இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (-இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (-நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉச் செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அவர் (-இமாம்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான்.
மேலும், அவர் (-இமாம்) தக்பீர் கூறி சஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி சஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் சஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (-நீங்கள் இமாமுக்குப் பிறகு சஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
680 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அவர் (-இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான் எனும் வாசகம் அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகாமில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் தகவலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் பின் உக்தி அபிந் நஸ்ர் (ரஹ்) அவர்கள் அவர் (-இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்ற இந்த ஹதீஸ் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் வரக்கூடிய) சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ள ஒருவரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் இருக்கிறதே! என்று பதிலளித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள், அந்த ஹதீஸ் சரியானதுதான்; என்னிடம் ஏற்கப்பட்டது தான் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அப்படியானால் அவர்கள் அறிவித்த ஹதீஸை நீங்கள் ஏன் இடம்பெறச் செய்யவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சரியானதாக உள்ள எல்லா ஹதீஸையும் நான் இதில் இடம்பெறச்செய்து விடுவதில்லை; (என் பார்வையில்) ஒருமித்தக் கருத்துப்படி சரியாக உள்ள ஹதீஸையே இங்கு இடம்பெறச் செய்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
681 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான் என்று தீர்மானித்துவிட்டான் என்று இடம்பெற்றுள்ளது.29
பாடம் : 17
(தொழுகையின் இறுதி அமர்வில்) அத்தஹிய்யாத்திற்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் ஓதுவது.
682 அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுடைய அவையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். எனவே, உங்கள்மீது நாங்கள் ஸலவாத் கூறும் முறை யாது? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) அமைதியாக இருந்தார்கள். அதனால் அவர் களிடம் அவர் (இதைக்) கேட்காமலிருந்திருக்க வேண்டும் என்றுகூட நாங்கள் எண்ணினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு ஸலவாத்) கூறும்படி சொன்னார்கள்:
அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
பிறகு (எனக்கு) சலாம் சொல்லும் முறை, நீங்கள் (ஏற்கெனவே) அறிந்துவைத்திருப்பதைப் போன்றுதான் என்று அவர்கள் கூறினார்கள்.30
683 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால், உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர் களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரிய வனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).31
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
684 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
685 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வ பாரிக் அலா முஹம்மதின் (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நீ சுபிட்சம் வழங்குவாயாக!) என்று (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. (அதன் ஆரம்பத்தில்) அல்லாஹும்ம (இறைவா!) என்பது இடம் பெறவில்லை.
686 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள்மீது எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)32
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
687 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்ற வருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரி கின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 18
(தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து கூறுவதும் ஆமீன் கூறுவதும்.33
688 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், சமிஅல்லாஹு விமன் ஹமிதஹ் என்று கூறும்போது நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். எவருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த்தைக்கு (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுûரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34
- மேற்கண்ட ஹதீஸின் கருத்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
689 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில், எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.35
690 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
691 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
692 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
693 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓதக்கூடியவர் (-இமாம்), ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறும்போது, அவருக்குப் பின்னால் நிற்பவர் ஆமீன் கூறி, அவர் கூறும் ஆமீன், வானத்திலுள்ள (வான)வர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 19
இமாமை மஃமூம் பின்தொடர்தல்36
694 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்து
விடவே அவர்கள் எங்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்தவாறே தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் (குனிந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால் நீங்கள் ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள்.37
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
695 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. பின்னர் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழவைத்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.38
696 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாகவும், மேலும் மேற்கண்ட ஹதீஸ்களிலுள்ள மற்றக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாகவும் இடம் பெற்றுள்ளது.
697 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களி டமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர் களுடைய வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று காணப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பில் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவு)ம் இடம்பெற்றுள்ளது.39
698 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில், மேற்கண்ட அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள (இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் எனும்) அதிகப்படியான குறிப்பு இடம்பெறவில்லை.
699 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றர்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப் படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள் என்று கூறி னார்கள்.40
700 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
701 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நாங்கள் நின்றவாறு தொழுதுகொண்டிருந்தோம். உடனே எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்த)ததும், நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்துகொள்ளப்பார்த்தீர்கள். அவர்கள்தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும்போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
702 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது எங்களுக்குக் கேட்கும் விதமாக அபூபக்ர் (ரலி) அவர்கள் (சப்தமாக) தக்பீர் கூறினார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
703 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருடன் நீங்கள் முரண்படாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச் செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால், நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுûûரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 20
(தொழுகையில்) தக்பீர் கூறுவதிலும் பிற செயல்களிலும் இமாமை முந்தலாகாது.
704 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (தொழுகை முறையை)க் கற்றுக் கொடுத்தார்கள். (அப்போது) நீங்கள் இமாமை முந்தாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள். அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்ôளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பில் இமாமுக்கு முன்பாக நீங்கள் தலையை உயர்த்தாதீர்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
705 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் என்பவர் கேடயமே ஆவார். எனவே, அவர் உட்கார்நது தொழுதால் நீங்களும்
உட்கார்ந்தே தொழுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறுங்கள். பூமியில் உள்ளோரின் (இந்த துதிச்) சொல் வானிலுள்ளோரின் (துதிச்) சொல்லுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
706 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத் தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச்செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 21
இமாமுக்கு நோய், பயணம் உள்ளிட்ட காரணம் ஏதேனும் ஏற்பட்டால் மக்களுக்குத் தொழுவிக்கத் தமக்கு பதிலாக மற்றொருவரை நியமிப்பதும், நின்று தொழ முடியாத காரணத்தால் அமர்ந்து தொழுதுகொண்டிருக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் நிற்பதற்கு சக்தி பெற்றிருந்தால் அவர் நின்றே தொழ வேண்டும்; உட்கார்ந்து தொழும் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றவர் உட்கார்ந்தே தொழ வேண்டும் எனும் சட்டம் நிற்பதற்குச் சக்தி உள்ளவர் விஷயத்தில் மாற்றப்பட்டுவிட்டது என்பதும்.42
707 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (கூறு கிறேன்) என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமை யானது. அந்த (இஷா) நேரத்தில் மக்கள் தொழுதுவிட்டனரா? என்று நபியவர்கள் கேட்டார்கள். நாங்கள், இல்லை, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். ஆனால், (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட் டார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது மக்கள் தொழுதுவிட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொடிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்துவிட்டு எழ முற்பட்டார்கள். ஆனால், (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றோம்.
-அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.-
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் -அன்னார் இளகிய மனமுடையவராக இருந்தார்கள்- உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இதற்கு நீங்கள்தாம் (என்னைவிடத்) தகுதியுடையவர் என்று கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டுவந்தார்கள். -அவ்விருவரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்கள்.-அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்துவந்த அவர்கள்) இருவரிடமும், என்னை அபூபக்ர் அவர் களுக்குப் பக்கத்தில் உட்காரவையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்று தொழுதார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலா னார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆகட்டும் (சொல்லுங்கள்) என்றார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த மற்றொரு மனிதரின் பெயரை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், அவர்தாம் அலீ (ரலி) என்று கூறினார்கள்.43
708 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோதுதான் முதலில் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது. அப்போது எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒரு கையை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் (தோள்)மீதும் மற்றொரு கையை மற்றொரு மனிதரின் (தோள்)மீதும் வைத்து(த் தொங்கி)க்கொண்டு, தம் கால்கள் பூமியில் இழுபட (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டுவந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் தெரியுமா? அவர்தாம் அலீ (ரலி) என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
709 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே தொங்கியபடி (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டு வந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் இல்லை (தெரியாது) என்று பதிலளித்தேன். அதற்கு அவர் அலீ (ரலி) என்று கூறினார்கள்.44
710 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறச் சொன்னார்கள்.) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேறு ஒருவரை தொழுவிக்க ஏற்பாடு செய்யும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய இறப்பு)க்குப் பின் அவர்களுடைய இடத்தில் (இமாமாக) நிற்கும் எவரையும் மக்கள் நேசிப்பார்கள் என்று என் மனதில் தோன்றவில்லை; மாறாக, அவர்களது இடத்தில் யார் வந்தாலும் அவரை ஒரு துர்குறியாகவே மக்கள் கருதுவார்கள் என்பதால்தான் திரும்பத் திரும்ப (அவ்வாறு) நான் வலியுறுத்தினேன். அந்தப் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடமிருந்து மாற்றி (வேறு யாரிடமாவது ஒப்படைத்து)விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
711 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிகிச்சைக்காக) எனது இல்லத்துக்கு வந்தபோது அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறுங்கள்! என்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனமுடையவர்; அவர் குர்ஆனை ஓதினால் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்களை விடுத்து மற்றொரு மனிதருக்கு நீங்கள் கட்டளையிட்டால் நன்றாக இருக்குமே! என்று கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இடத்தில் முதன் முதலாக நிற்பவரை மக்கள் துர்குறியாகக் கருதுவதை நான் விரும்பாததே இவ்வாறு நான் கூறியதற்குக் காரணமாகும். இரண்டு அல்லது மூன்று முறை நான்
அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். ஆனால் நபியவர்கள், அபூபக்ர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாயிருந்தபோது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்றவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் (சப்தமிட்டு ஓதி) மக்கள் கேட்கும்படி செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அபூபக்ரிடம் சொல்லுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று (மீண்டும்) நபியவர்கள் சொன்னார்கள். உடனே நான் (மற்றொரு துணைவியாரான) ஹஃப்ஸாவிடம் அபூபக்ர் (ரலி) வேகமாகத் துக்கப்படுகின்றவர்; உங்களது இடத்தில் அவர் நின்றால் அவரால் மக்களுக்குக் கேட்கும்படி செய்ய முடியாது; உமர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால் என்ன? என்று நபியவர்களிடம் கூறுங்கள் என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே சொன்னார். அதற்கு (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய
(அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். மக்களுக்குத் தொழுவிக்கும்படி அபூபக்ரிடம் சொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தங்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித் தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தமது உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். உடனே எழுந்து இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி தம் கால்கள் பூமியில் இழுபடப் புறப்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க ஆரம்பித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றுகொண்டு தொழலானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரும், அபூபக்ர் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.45
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
713 மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது... என்று இடம்பெற்றுள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைத்துவரப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்தத் தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக சப்தமாகக் கூறிக்கொண்டிருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கவாட்டிலி ருந்துகொண்டு மக்களுக்குக் கேட்கும் விதமாக (தக்பீர்) கூறிக்கொண்டிருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
714 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். இதனிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குச் சற்று உடல்நலம் தேறியி ருப்பதை உணர்ந்தார்கள். எனவே, அவர்கள் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுமிடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நேராக அவர்களது பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பின்பற்றித் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
715 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். இவ்வாறிருக்க, (ஒரு) திங்கள் கிழமை அன்று மக்கள் தொழுகை வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரைச் சீலையை விலக்கி, நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் குர்ஆன் பிரதியின் தாளைப் போன்று (பொலிவுடன்) இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து (மகிழ்ச்சியோடு) புன்னகைத்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்ததைக் கண்டு மகிழ்ச்சியால் தொழுகையிலிருக்கும்போதே (இன்ப) அதிர்ச்சியடைந்தோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் நகர்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்டு வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி உங்கள் தொழுகையை நிறைவுசெய்யுங்கள் என்று தமது கையால் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறைக்குள்) நுழைந்து திரைச் சீலையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
716 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமையன்று (தமது அறையின்) திரைச் சீலையை விலக்கியபோது நான் அவர்களைப் பார்த்ததுதான் இறுதியாக நான் பார்த்ததாகும் என்று இடம்பெற்றுள்ளது.
(இதற்கு முந்தைய) ஸாலிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதுமாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமி ருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
717 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக எங்களுக்கு அமர்ந்து தொழுவித்துவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் அவர்கள் வெளியில் வர வில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரைச் சீலையைப் பிடித்து உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் எங்களுக்குத் தெரிந்தபோது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களது முகத்தைவிடவும் மகிழ்வூட்டுகின்ற எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தொழுகையைத் தொடர) முன்னே செல்லுமாறு தமது கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு இறக்கும்வரை நபி (ஸல்) அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை.46
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
718 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டு அவர்களது நோய் கடுமையானபோது, அபூபக்ரை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இளகிய மனமுடையவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ரிடம் சொல்லுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்! (பெண்களாகிய) நீங்கள் நபி யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.47
பாடம் : 22
இமாம் வருவது தாமதமானால் மக்கள் தங்களுக்குத் தொழுவிக்க மற்றொருவரை முன்னிறுத்தலாம். ஆனால், அவரை முன்னிறுத்துவதால் குழப்பம் உண் டாகுமோ என்ற அச்சம் ஏற்படாதிருக்க வேண்டும்.
719 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குபா பகுதியிலிருந்த பனூ அம்ர் குலத் தாரிடையே தகராறு ஏற்பட்ட செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்களிடம் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிடவே, தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, (நபியவர்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால்) நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்கிறீர்களா, நான் இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சரி என்று கூறிவிட்டு, மக்களுக்குத் தொழுவித்தார்கள். மக்கள் தொழுகையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) கை தட்டினார்கள். -(பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.- மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே (முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை இதற்குப் பணித்தமைக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; பிறகு (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள். பின்னர் (தொழுது முடித்து) திரும்பியதும் அபூபக்ரே! நான் உங்களை அங்கேயே நிற்குமாறு பணித்தும்கூட நீங்கள் அங்கேயே நிற்காமலிருந்ததற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அபூக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு (இந்த) அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), நீங்கள் ஏன் (இந்த
அளவு) அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்குத் தமது தொழுகையில் ஏதேனும் தோன்றினால் (அதை உணர்த்துவதற்காக) அவர் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறட்டும்! ஏனெனில், அவர் அவ்வாறு கூறும் போது அவர்பால் கவனம் செலுத்தப்படும். கை தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.48
720 மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு (நெஞ்சைத் திருப்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்துவந்து வரிசையில் நின்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
721 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்காகச் சென்றார்கள். தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை வரிசைகளை விலக்கிக் கொண்டு முன்வரிசைக்கு அருகில் வந்து நின் றார்கள் என்றும், அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்தார்கள் என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
722 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுக்குப் புறத்திற்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நான் ஒரு (தண்ணீர்)பாத்திரத்தை எடுத்துச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தேவையை முடித்துவிட்டு) என்னிடம் திரும்பி வந்தபோது பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவர்களுடைய கைகளில் ஊற்றினேன். அவர்கள் (மணிக்கட்டுவரை) மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் முகத்தைக் கழுவினார்கள். பிறகு (முழங்கைவரைக் கழுவுவதற்காகத்) தமது நீளங்கியை முழங்கைகளிலிருந்து வெளியிலெடுக்க முயன்றார்கள். நீளங்கியின் கைப் பகுதி இறுக்கமாக இருந்த காரணத்தால் தம் கைகளை நீளங்கியில் நுழைத்து நீளங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியில் எடுத்தார்கள். பிறகு கைகைளை மூட்டுவரை கழுவினார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக) இரு காலுறைகள்மீதும் ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். பின்னர் (பள்ளிவாசலை நோக்கிச்) சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லி (அவர்களுக்குப் பின்னால் நின்று) தொழுதுகொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்தத் தொழுகை யின்) இரு ரக்அத்களில் ஒரு ரக்அத்தான் கிடைத்தது. எனவே, கிடைத்த அந்த இறுதி ரக்அத்தை மக்களுடன் சேர்ந்து தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (தொழுகையை முடிப்பதற்காக) சலாம் கொடுத்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, (எஞ்சிய ஒரு ரக்அத்தைத் தொழுது) தமது தொழுகையை நிறைவு செய்தார்கள். இ(வ்வாறு நபியவர்களை முந்திக் கொண்டு தாங்கள் தொழுத)து, முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆகவே, அவர்கள் பல முறை தஸ்பீஹ் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின் மக்களைப் பார்த்து, நீங்கள் செய்தது நல்லதுதான் அல்லது நீங்கள் செய்தது சரிதான் என்று குறித்த நேரத்தில் மக்கள் தொழுததைப் பாராட்டும் வகையில் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (நபி (ஸல்) அவர்கள் வந்ததும்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்னுக்கு கொண்டுவர நான் நினைத்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் (தொழுவிக்கட்டும்)! என்று கூறினார்கள் என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 23
தொழுகையில் (இமாமுக்கு ஏற்பட்ட தவறைச் சுட்டிக் காட்ட) ஏதேனும் (செய்ய வேண்டுமெனத்) தோன்றினால் ஆண்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூற வேண்டும்; பெண்கள் கை தட்ட வேண்டும்.
723 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும் கைதட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது. ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அறிஞர்களில் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தஸ்பீஹ் கூறி, சைகை செய்வார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.49
724 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில், தொழுகையில் எனும் குறிப்பு அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
பாடம் : 24
தொழுகையைச் சிறந்த முறையில் (அதன் வழிமுறைகளைப் பேணி) முழுமை யாகவும் உள்ளச்சத்துடனும் தொழ வேண்டும் எனும் கட்டளை.
725 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் (ஒருவரைப் பார்த்து), இன்னாரே, நீங்கள் நல்ல முறையில் தொழக் கூடாதா? தொழுதுகொண்டிருப்பவர் தாம் எப்படித் தொழுகிறோம் என்பதைக் கவனிக்கக் கூடாதா?அவர் தமக்காகத்தானே தொழுகிறார்? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு முன்னால் இருப்பவர்களைப் பார்ப்பதைப் போன்றே எனக்குப் பினனால் இருப்பவர்களையும் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.
726 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) நான் நோக்கும் திசை இதுதான் (இத்திசையில் மட்டுமே நான் பார்க்கிறேன்) என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய ருகூஉம் (குனிதலும்) சஜ்தாவும் (சிரவணக்கமும்) எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக, எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களை நான் பார்க்கிறேன்
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50
727 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவை யும் செம்மையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்குப் பின்னால் அல்லது என் முதுகுக்குப் பினனால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51
728 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவை யும் முழுமையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் என் முதுகுக்குப் பின்னால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
பாடம் : 25
இமாமை முந்திக்கொண்டு ருகூஉ மற்றும் சஜ்தா போன்றவற்றைச் செய்யலாகாது.
729 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, மக்களே! நான் (உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் உங்களுடைய) இமாம் ஆவேன். எனவே ,(தொழுகையில்) குனிதல் (ருகூஉ), சிரவணக்கம் (சஜ்தா), நிற்றல் (கியாம்) மற்றும் (சலாம் கொடுத்துத்) திரும்புதல் ஆகியவற்றில் என்னை முந்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களை எனக்கு முன்னாலும் பார்க்கிறேன்; எனக்குப் பின்னாலும் பார்க்கிறேன். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் பார்த்ததை நீங்கள் பார்த்திருந்தால் நிச்சயமாக நீங்கள் குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிமாக அழுவீர்கள் என்று கூறினார்கள். மக்கள் நீங்கள் எதைப் பார்த்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், சொர்க்கத்தையும் நரகத்தையும் நான் பார்த்தேன் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்ôளர்தொடர் களில் வந்துள்ளது.
730 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (சலாம் கொடுத்துத்) திரும்புதல் என்பது இடம்பெறவில்லை.
731 முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாமுக்கு முன்னால் தமது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.52
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
732 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் இமாமுக்கு முன்னால் தனது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்சாமல் இருக்க முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
733 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ரபீஉ பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவருடைய முகத்தைக் கழுதையின் முகமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை (அவரால் அஞ்சாமல் இருக்க இயலாது) என்று இடம்பெற்றுள்ளது.53
04.01.2010. 19:01
