தவ்ஹீத் ஜமாஅதினர் சொல்லியவண்னம் செய
தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆன் ஹதீஸை வாயளவில் பேசுவார்கள். ஆனால் செயல்படுத்த மாட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? இன்ஆமுல் ஹஸன்
பதில் :
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி முழுமையான விபரம் தெரியாதவர்களே இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்க முடியும். நமது ஜமாஅத்தைப் பற்றியும் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாறையும் நன்கு அறிந்தவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள்.
ஏனென்றால் குர்ஆன் ஹதீஸைப் பேசுவதோடு நின்றுவிடாமல் அவற்றைச் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி மாபெரும் புரட்சி ஏற்படுவதற்கு இந்த ஜமாஅத் தான் முழுக் காரணமாக இருந்ததுள்ளது. குர்ஆன் ஹதீஸை வாழ்க்கையில் செயல்படுத்தும் போது எத்தனை தடைகள் வந்தாலும் அந்தத் தடைகள் எத்துணை பெரியதாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடி மார்க்கத்தைச் செயல்படுத்திக் காட்டியவர்களை இந்த ஜமாஅத்தில் தான் பார்க்க முடியும்.
இதற்கு உதாரணமாகச் சில விஷயங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
1. வரதட்சணை மற்றும் பித்அத்கள் இல்லாத நபிவழித் திருமணங்களை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிகச் சிக்கனமான முறையில் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தியது.
2. பெருநாளை ஏழை எளியவர்கள் சந்தோஷமாகக் கழிப்பதற்காக நபியவர்கள் ஃபித்ரா என்ற பெருநாள் தர்மத்தை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். சமுதாயத்தில் அறவே நடைமுறையில் இல்லாமல் இருந்த நபிவழிக்கு புத்துயிரூட்டி நடைமுறைப்படுத்தியது.
3. சமுதாயம் அறியாது இருந்த திடல் தொழுகை என்ற நபிவழியை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தியது.
4. பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற கருத்து பரவலாக முஸ்லிம்களிடம் இருந்தது. இது தவறு என்பதை உணர்த்தி நபியவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்தது போன்று தற்போது பெண்கள் இறையில்லங்களை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியது.
மார்க்கத்துடன் இளைஞர்களுக்கு அறவே சம்பந்தம் இல்லாத நிலை இருந்தது. இந்நிலை மாறி இன்றைக்கு மார்க்கப் பணிகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர்களாக இளைஞர்களே உள்ளனர். மேலும் தாடி வைப்பது போன்ற நபிவழிகளை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர்.
அதே நேரத்தில் நமது ஜமாஅத்தில் உள்ளவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்று நாம் கூற மாட்டோம். மனிதன் என்ற அடிப்படையில் நம்மிடமும் சில தவறுகள் குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் மற்ற இயக்கத்துடன் மற்ற ஜமாஅத்தினருடன் நமது ஜமாஅத்தை ஒப்பிடுகையில் நற்காரியங்களில் நமது ஜமாஅத் மற்றவர்களை மிஞ்சி நிற்பதையும் மற்றவர்களிடம் உள்ள குறைகளை விட நமது ஜமாஅத்திடம் குறைகள் குறைவாக இருப்பதையும் காணலாம்.
இந்த உரையையும் கேட்கவும்
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sathithathu_enna/
Published on: 28.02.2011. 23:12 Views: 547

