தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தவனா
"தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்றார்கள் நபிகள் நாயகம்" என்று சூபி கொள்கையை கொண்டவர்கள் கூறுகிறார்கள். இது "அஹம் பிரம்மாஸ்மி" "நான் கடவுள்" என்று கூறும் பிறமதக் கொள்கை போல் உள்ளது. இப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதாவது உள்ளதா? தயவுசெய்து விளக்கம் தரவும்.
ஹாஜா
பதில்
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.
وإن لم يصح من طريق الرواية فقد صح عندنا من طريق الكشف இதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாவிட்டாலும் நம்முடைய மெஞ்ஞானத்தின் படி இது சரியான செய்தி தான் என்று மனித ஷைத்தான் இப்னு அரபி கூறியிருக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவுபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சகானீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். இது இட்டுக்கட்டப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும்.
தனது நாட்டம் தேவை பலவீனம் பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை.
தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும்? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் வர வேண்டும் ?
குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர்.
மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தை கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை.
தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர்.
உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்கு தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது.
அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர்.
இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறவில்லை தான் ஆனால் இதன் கருத்து சரியானது தான் என்று சிலர் குட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது தான் படைக்கப்பட்டவன் என்று ஒருவன் அறிந்து கொண்டால் தன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொள்வான் என்பது போன்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.
இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதைப் பற்றி இது பேசவில்லை, ஒரு எறும்பு படைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டாலும் படைத்தவன் இருக்கிறான் என்று அறிய முடியும்.
மேலும் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இன்னும் இறைவனை அறியவில்லை. அவர்கள் தன்னை அறிந்து கொண்டால் தான் இறைவனை அறிய முடியும் என்பது தான் இதன் கருத்தாகும். அதாவது மனிதனே இறைவனாக இருப்பதால் அதை அறிந்து கொண்டால் அப்போது இறைவனை அறிந்து கொள்ளலாம் என்ற அத்வைதக் கொள்கையை பரப்பவே இது இடுக்கட்டப்பட்ட்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Published on: 13.12.2012. 22:56 Views: 631

