தீன்குலப் பெண்மணி மே 2012
தீன்குலப் பெண்மணி மே 2012
தலையங்கம்
நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?
விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.
விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.
2004 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தாக்கிய சுனாமியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பல அதிசயமான நிகழ்வுகளையும் ஆச்சரியக் கண் கொண்டு பார்த்தவர்கள் ஏராளம். இவ்வளவு பெரிய பயங்கரம் நடக்குமா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பனைமரம் உயரத்திற்கு கடல் அலைகள் ஏற்பட்டு பல லட்சம் மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.
பூமி பல அடுக்குகளாக அமைந்திருப்பதும் பூமிக்குள் நெருப்பு குழம்புகள் இருப்பதும் இது போன்ற நில நடுக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன.
இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக சிறியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
சிறிய உராய்வு கூட ஒரு நாட்டையே தலைகீழாக மாற்றிப் போடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளது.
இந்தோனேஷியாவின் சும்தரா தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
மனிதர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் இது போன்ற இடர்களை ஏற்படுத்துவான். மனிதர்கள் தங்கள் செயல்களை மதிப்பீடு செய்வதற்காகவும் இதன் பின்னர் திருந்தி வாழ்வதற்காகவும் இதுபோன்ற சோதனைகளை ஏற்படுத்துவதாக அல்லாஹ்
கூறுகிறான்.
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.
(அல்குர்ஆன் 9:126)
இதை உணர்ந்து நடக்கும் நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக
ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 11
முடிச்சுகளில் எதும் பெண்கள் ஏன்றால் யார்?
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
அடுத்ததாக, ஸிஹ்ர் - சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி 2766,6857முஸ்லிம் 451
முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும்.
ஒன்றிலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றைச் செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படியெனில் சூனியத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்றாலே வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இன்று மக்கள் அப்படியில்லை. அதனால்தான் நபியவர்கள் இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக இதனை எச்சரிக்கிறார்கள்.
இன்னொரு இடத்தில் இரண்டு பாவங்களை மட்டும் குறிப்பிட்டு நபியவர்கள் சொல்லும் போது இணைவைத்தலையும் சூனியத்தையும் மட்டுமே முக்கியத்துவப்படுத்தி சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5764
அப்படியெனில் மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பயங்கரமான குற்றம் என்று சொல்லித் தரப்பட்ட விசயத்தில் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு மக்களை வழி கெடுக்கின்றனர். அறியாத மக்கள் வயிற்று வலிக்காகவும் காய்ச்சலுக்காகவும் ஏதேனும் ஒரு பிரச்சினைக்கு மார்க்க அறிஞர்களிடத்தில் வரும்போது அவர்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்லாமல், உனக்கு அவர் சூனியம் வைத்து விட்டார் இவர் சூனியம் வைத்து விட்டார் என்றெல்லாம் இல்லாத சூனியத்தை வைத்து மக்களைப் பயங்காட்டி ஏமாற்றி, அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டிவிடுவது, சம்பந்தம் செய்த குடும்பங்களிலும் சண்டையை மூட்டிவிட்டு குடும்பங்களை சூனியத்தின் பெயரால் பிரிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினைகள் நடப்பது என்பது எல்லோரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். இது அதிசயம் ஒன்றுமில்லை. இரண்டு மனிதர்களின் உள்ளங்கள் எல்லாவற்றிலும் ஒத்துப் போவது என்பது எந்தக் காலத்திலும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி எல்லா விசயத்திலும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் தகப்பனும் பிள்ளையுமாக இருந்தாலும் சரியே. அது போன்று கணவன் மனைவிக்கும் அப்படித்தான். விதிவிலக்கெல்லாம் ஒன்றுமில்லை. எப்படி முடிவெடுத்தாலும் ஒருவரின் கருத்து ஒருநேரம் மிகைத்தும் ஒருவரின் கருத்து சிலநேரம் மிகைக்காமலும் இருக்கத்தான் செய்யும் என்கிற இந்த சாதாரண விசயத்தைக்கூட புரிந்து கொள்ளாத சிலர், சூனியத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற இந்த மோசடிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.
மனைவி, கணவன் என்னைச் சரியாகக் கவனிக்காமல் இருக்கிறார் என்றும் கணவன் மனைவியைப் பற்றி மனைவி எனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருக்கிறாள் என்றும் குறை சொல்லுவார்கள். உடனே அந்தப் பெண்ணிடம் உனக்கு மாமியார் வீட்டில் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று இல்லாத சண்டையை மூட்டிவிட்டு பெரியளவுக்கு குடும்பங்களில் பிரிவினையை உண்டுபண்ணி விடுவார்கள்.
நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பேச்சுக்காக சூனியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரக்கூடிய செய்திகள் குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதால் அவைகள் பலவீனமான செய்தி என்று சொல்லி நாம் அந்தச் செய்திகளை மறுக்கிறோம்.
இருந்தாலும் ஒரு வாதத்திற்காக நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக அவர்கள் சொல்லுவதைப் போன்று வைத்துக் கொள்வோம். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை அந்த ஹதீஸில் உள்ளபடி எப்படி அறிந்து கொண்டார்கள்.
அந்த ஹதீஸில் நபியவர்களின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரண்டு மலக்குமார்கள் அமர்ந்து கொண்டு பேசியபோதுதான் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றனர். அதன்படி ஆராய்ந்தால், ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி இறைவனால் மலக்குமார்களின் மூலமாகத்தான் அறிவிக்கப்பட்டது என்பதை அறிவுடைய யாரும் ஏற்றுக் கொள்வார்கள். மறுக்க மாட்டார்கள்.
விசயம் இவ்வாறு இருக்க, இன்று சமுதாயத்தில் மதரஸாக்களில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற போலித்தனமான உலமாக்கள் என்ற பெயரில் இருந்து கொண்டு, வயிற்று வலிக்காக வருகிற நபரிடம் சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?. மலக்கு வந்தல்லவா சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே!. தனக்கு என்ன நடக்கிறது என்பதே நபியவர்களுக்குத் தெரியாமல் குழம்பி இருந்ததாகத்தான் சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகளில் உள்ளது.
அந்தச் செய்தி சரியில்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் அதைச் சரியென்று வைத்துக் கொண்டு பேசினாலும், அந்தச் செய்திகளில் உள்ள தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது, ஐம்பது நாட்களாக எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்றும் நபியவர்கள் சொன்னதாகவும் அதில் இருக்கிறது. பிறகு தான் இரண்டு வானவர்களில் ஒருவர் நபியவர்களின் தலைமாட்டிலும் இன்னொருவர் கால்மாட்டிலும் உட்கார்ந்து கொண்டு பேசியதின் மூலம் தனக்கு சூனியம் வைக்கப்பட்டது நபியவர்களுக்குத் தெரிகிறது என்று பதிவாகியுள்ளது.
வஹீயின் மூலமாக அல்லாஹ்வோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நபியவர்களுக்கே தனக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. நபிக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வானவர்கள் சொன்ன பிறகுதான் நபியவர்களுக்கே சூனியம் வைக்கப்பட்டதென அறிந்து கொண்டார்கள் என்றால் இன்று மந்திரவாதி என்பவர்கள் எப்படி ஒரு மனிதனுக்கு சூனியம் வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்கள். அதுவும் இவர்தான் வைத்தார் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்.
லபீத் இப்னு அஃஸம் என்பவன்தான், இந்தக் கிணற்றில்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தான் என்பதையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே நபியவர்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை ஆராயும் போது அந்த ஹதீஸ்கள் சரியென்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்கிற பித்தலாட்டத்திற்கு ஆதாரம் அதில் இல்லவே இல்லை.
இந்த ஹதீஸை சரியென்று நம்புபவர்களுக்குத்தான் இதை நாம் சொல்கிறோம். நம்மைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் சூனியத்தின் மூலம் ஒரு கேடும் செய்ய முடியாது என்பதுதான்.
அடுத்து, நபிமார்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மலக்குமார்களின் மூலமாக வஹீ வருவதால் அவர்களுக்கு தெரிகிற வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்றாவது நம்பலாம். ஆனால் நபிமார்கள் அல்லாத நம்மைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வஹீ எதுவும் வராது என்பதினால் அதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. எனவே அல்லாஹ்விடம் பொதுவாக பிரார்த்தனை செய்துவிட்டுப் போவதுதான் சரியான வழிமுறையாகும்.
அதனால் இந்த ஸிஹ்ர்-சூனியத்தை வைத்துக் கொண்டு வஸியம் பண்ணி விட்டார்கள், அதுபண்ணி விட்டார்கள் இது பண்ணி விட்டார்கள், மருந்து கொடுத்து விட்டார்கள், முகம் மாத்து பண்ணிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுவதை நாம் நம்பக்கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம்.
அதற்கடுத்ததாக, சூனியம் சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அந்த சூராவின் வாசகத்திற்கான அர்த்தம். இந்த சூரத்துல் ஃபலக் என்ற அத்தியாயத்தில் சிலவற்றிலிருந்து அல்லாஹ் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லித் தருகிறான்.
பிறகு இருட்டின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான்.
அதன் தொடர்ச்சியாகத்தான்,
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கிலிருந்தும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபியே சொல்வீராக என்று அல்லாஹ் சொல்லுகிறான்.)
இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதுகிற பெண்கள் என்று உள்ளதால் இதுதான் ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி நம்மை நம்ப வைக்கப் பார்ப்பார்கள்.
இந்த சூராவும் இதற்கு அடுத்தாக உள்ள சூரத்துந் நாஸ் என்ற இரண்டு அத்தியாமும், நபியவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுப்பதற்குத்தான் இறங்கியது என்றும். ஒரு நூலில் 12 முடிச்சுகளைப் போட்டுத்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்தனர். எனவேதான் இந்த இரண்டு அத்தியாயங்களில் 12 வசனங்கள் உள்ளன என்றும். ஒவ்வொரு வசனத்தை ஓதும்போதும் ஒவ்வொரு முடிச்சு அவிழ்ந்து நபியவர்கள் குணமடைந்தார்கள் என்றும் ஒரு கதையை எழுதி வைத்துள்ளனர்.
இப்போது இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று வருகிறது. ஆனால் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் சூனியம் வைத்தது ஆண் என்று வருகிறது. இது முரண்பாடானதுதான்.
நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக கதை விடுகின்ற போலிகள் சொல்வதைப் போன்று வைத்துக் கொண்டால் நபியவர்களுக்கு சூனியம் வைத்தது பெண்களாக இருந்தால்தான் இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் பற்றிப் பேசுகிறது என்று சொல்லலாம். உண்மையில் புகாரி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஹதீஸில் இருக்கும் செய்தி என்னவெனில், லபீத் பின் அஃஸம் என்ற யூதன்தான் நபியவர்களுக்கு சூனியம் வைத்ததாக உள்ளது. (பார்க்க புகாரி 3268).
அந்த ஹதீஸ்கள் சரியில்லை என்று நாம் சொல்லி விட்டோம். ஒரு வாதத்திற்கு சரியென்று வைத்துக் கொண்டால்கூட, அதற்காகத்தான் இந்த ஆயத்து இறங்கியிருக்குமானால் அது பொய்தான். ஏனெனில் நபியவர்கள் காலத்தில் யூதர்களிலுள்ள ஆண்கள்தான் சூனியம் வைத்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களில் எந்தப் பெண்ணும் சூனியம் வைக்கவில்லை. அதுபோன்று நபியவர்களுக்கு சூனியம் வைத்ததும் ஆண்கள்தாம்.
பொதுவாக ஸிஹ்ர்-சூனியம் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிந்ததும் ஆண்கள்தாம். இன்னும் சொல்லப் போனால் யூதர்களைப் பொறுத்த அளவுக்கு பெண்களில் யாரும் வேதத்தையும் மந்திரங்களையும் ஓதவோ தொடவோ கூடாது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாம் வந்த பிறகுதான் வேதங்களை பெண்களும் தொடலாம், தொடர்பு கொள்ளலாம், ஓதிக்கொள்ளலாம், வேதத்திலுள்ள சத்தியக் கொள்கையையும் எடுத்துச் சொல்லலாம் என்று பெண்களுக்கும் உரிமை கொடுத்தது.
இஸ்லாத்திற்கு முந்தியுள்ள பிற எல்லா சமுதாயங்களிலுமே வேதங்களை பெண்கள் படிக்கக் கூடாது. தொடவே கூடாதென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றளவும்கூட நமது நாட்டிலுள்ள சிலர் மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று சொல்லி வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு முன்னோடிகளே யூதர்கள்தாம். யூதர்கள் மாதவிடாய்ப் பெண்களை வீட்டைவிட்டே வெளியேற்றி விடுவார்கள்.
எனவே பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று விதி செய்த சமுதாயத்தில் ஒரு பெண் நபியவர்களுக்கு சூனியம் வைத்திருக்க முடியாது. ஆனால் இங்கே இந்த வசனத்தில் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று வருகிறது. ஆனால் ஆண்கள்தான் சூனியம் செய்யும் வேலைகளை செய்துள்ளனர் என்பதை அறியும்போது, இந்த வசனம் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதைப் பற்றிப் பேசவே இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் இப்படி நபியவர்களுக்கு 12 முடிச்சுப் போட்டுத்தான் சூனியம் வைத்தார்கள் என்ற செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்புகள் எதுவுமே சரியில்லாதவை என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹ‚ல் பாரியில் சொல்லுகிறார்கள்.
இப்னு கதீர் அவர்களும் கூட 4 வது பாகம் 575 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார்கள். அது போன்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், இது சம்பந்தமாக வருகிற எந்த அறிவிப்பும் சரியானதாக இல்லை என்று தனது தல்ஹீஸுல் ஹபீர் என்ற நூலில் 4 வது பாகம் 40 ஆவது பக்கத்தில் சொல்லுகிறார்.
எனவே முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்ற இந்த ஆயத்து, ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றி பேசுகிற வசனம் இல்லை. சூனியம் செய்வதற்கும் வித்தை செய்வதற்கும் இந்த வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஸிஹ்ர்-சூனியத்தினால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் சூனியம் என்பதே கிடையாது என்றும் நிரூபித்த பிறகு அதிலிருந்து ஏன் பாதுகாப்புத் தேடச் சொல்ல வேண்டும். ஏதேனும் நடந்தால்தான் பாதுகாப்புத் தேடுவது நியாயம். சூனியத்தினால் எதுவுமே நடக்காது என்கிற போது பாதுகாப்புத் தேடுவது என்பது அர்த்தமற்றது. அது தேவையுமில்லை.
அப்படியெனில், முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்று குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்துமே ஆய்வு செய்து விடலாம்.
முதலில் முடிச்சுகளில் ஊதுதல், முடிச்சு போன்ற வார்த்தைகள் எந்த அர்த்தத்தில் குர்ஆனில் ஹதீஸில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்தால், அது ஒரு இலக்கிய அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். நம் நாட்டில் கூட அப்படித்தான் பயன்படுத்தப்படுகிறது. முடிச்சவக்கி, முடிச்சு அவிழ்க்கிற பயல் என்றால் முடிச்சு போட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அந்தக் காலங்களில் பணப்பை என்கிற மணிப்பர்ஸ் போன்றவைகளெல்லாம் கிடையாது. ஒரு துணியை பை போன்று தைத்து பையின் மேல்பகுதியில் கயிறால் முடிச்சுப்போட்டு வைத்துக் கொள்வார்கள். எங்களது ஊரிலெல்லாம் அதற்கு பசுக்குட்டி என்பார்கள். அதற்கு சுருக்குப் பை என்றும் சொல்லுவார்கள். அந்த சுருக்குப் பையிலுள்ள முடிச்சியை அவிழ்த்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். இன்றைக்கு பிக்பாக்கட் என்று சொல்கிறார்களே அதுதான். இந்த பிக்பாக்கட்டின் பழைய வார்த்தைதான் முடிச்சவிக்கி என்பது. முடிச்சு அவிழ்ப்பது என்பதற்கு நேரடி அர்த்தம் அப்படியே விளங்குகிறது.
ஆனால் நடைமுறையில் முடிச்சவிக்கி என்றால் திருடனுக்குச் சொல்லப்படும் வார்த்தையாகும். ஆக சில சொற்களுக்கு நேரடி அர்த்தம் கொள்வோம். சில சொற்களுக்கு இலக்கிய அர்த்தம் வைத்துக் கொள்வோம்.
உதாரணமாக கம்பி எண்ணுகிறான் என்று சொல்லுகிறோம்
அப்படியென்றால் இரும்புக் கடையில் வேலை செய்கிறார் என்றல்லவா அர்த்தம் செய்ய வேண்டும். யாராவது அப்படி அர்த்தம் கொள்ளுகிறோமா? இல்லை. கம்பியை எண்ணுகிறான் என்ற அர்த்தமும் கொடுப்பது இல்லை. இரும்புக் கடையில் வேலை பார்ப்பவரும் கம்பியை எண்ணித்தான் வியாபாரம் செய்கிறார். இருப்பினும் நாம் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் (சிறைச்சாலை) இருப்பவர்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். ஜெயிலில் இருப்பவர் வெளியில் வர இயலாது. உள்ளேயும் எந்த வேலையும் இருக்காது. அவனுக்கு முன்னால் இரும்புக் கம்பிகளாலான கதவுதான் இருக்கும். வேறுவழியில்லாமல் கம்பியைப் பார்த்துக் கொண்டே இருப்பதால்தான் கம்பி எண்ணுகிறான் என்ற வார்த்தையை ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்துகிறோம்.
எனவே கம்பி எண்ணுதல் எப்படி ஜெயிலில் இருப்பவனுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்றே முடிச்சுகளில் ஊதுதல் என்கிற வார்த்தைக்கும் நடைமுறையில் இலக்கியமாக பயன்படுத்துகிற அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும்.
ஒரு வாதத்திற்காக கேட்கிறோம். ஒருவன் ஒரு நூலிலோ கயிற்றிலோ முடிச்சுப் போட்டு ஊதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனால் முடிச்சியில் ஊதுவதற்கு நாம் ஏன் பாதுகாப்புத் தேடவேண்டும்? நன்றாக சிந்தித்துப் பார்த்தால் அப்படியே நேரடி அர்த்தம் கொடுப்பதினால் எந்த பொருளையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்படியெனில் அல்லாஹ் தஆலா வேறு ஏதோ ஒரு விசயத்தைச் சொல்ல வருகிறான் என்பது தெரிகிறதல்லவா. இதுபோன்று குர்ஆனில் நிறைய விசயங்களுக்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான். அதுபோன்று ஹதீஸிலும் இருக்கிறது. ஏன் நம் எல்லோருடைய பேச்சுக்களிலும்கூட இப்படி இலக்கியமாகப் பேசுவது இருக்கத்தான் செய்கிறது. மனிதர்கள் பேசுகிற பேச்சுகளிலெல்லாம் இருக்கிறது.
பழமொழிகள்கூட இந்த அடிப்படையில்தான் சொல்லுகின்றோம். உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் நன்றாக தொடர்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு வந்த ஒரு மாணவன் பின்னால் சரியாக வராமல் பள்ளியைப் புறக் கணித்தால் அவனைப் பார்த்து, "வரவர மாமியா கழுதை போல ஆனாளாம்'' என்று பேசுவோம். அப்படியெனில் மாமியார் கழுதையாகப் போனார் என்றா அர்த்தம். அதுவெல்லாம் கிடையாது. நன்றாக இருந்தவன் கெட்டுவிட்டான் என்று அர்த்தம். அவ்வளவுதான்.
அதனுடைய நேரடி அர்த்தத்தை எல்லாம் கவனிக்க மாட்டோம். இப்படி பயன்படுத்துவது எல்லாருடைய பேச்சுகளிலும் இருப்பதைப் போன்று குர்ஆன் ஹதீஸிலும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சுகளில் ஊதும் பெண்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதைப் புரிந்து கொள்வதற்கு குர்ஆனிலிருந்தே இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கிறார்கள். அதாவது மூஸா நபிக்கு சரியாக பேச்சு வராது. அதனால்தான் மூஸா நபியுடன் அவர்களின் தம்பி ஹாரூனையும் நபியாக அனுப்பி மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய சொன்னான். மூஸா நபியவர்கள் விரிவாக பேச மாட்டார்கள். சுருக்கமாக ஹாரூன் நபியிடம் சொல்லி விடுவார்கள். அவர் விரிவாக விளக்கி தங்கு தடையின்றி பேசுகிற சொல் திறமை பெற்றவர்.
"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்). "உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம்.
(அல்குர்ஆன் 28:34,35)
எதனால் அல்லாஹ் ஹாரூனையும் நபியாக்கினான் என்றால் மூஸா நபி அல்லாஹ்விடம் ஒரு துஆ (பிரார்த்தனை) செய்தார்கள்.
"என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!
(அல்குர்ஆன் 20:25...32)
இந்த வசனத்தில் மூஸா நபியவர்கள் தனது நாக்கிலுள்ள முடிச்சியை அவிழ்த்துவிடு என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அப்படியெனில் மூஸா நபியின் நாக்கு ரொம்ப பெரியதாக இருந்தது என்றும் அல்லாஹ் மூஸா நபியின் நாக்கை இழுத்து பிடித்து முடிச்சு போட்டு வைத்திருந்தான் என்றும் விளங்க முடியுமா?, அப்படி அர்த்தம் செய்வது முட்டாள்தனமானது.
தனக்கு ஏற்பட்டுள்ள திக்குவாயை அல்லது கொன்னலைத்தான் நாவிலுள்ள முடிச்சு என்கிறார்கள். திக்குவாய் என்றால் ஒரு வார்த்தையைப் பேசமுடியாமல் திணறுவதற்குத்தான் சொல்லப்படும். அதைத்தான் நாவின் முடிச்சு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். யாருடைய நாக்கிலாவது முடிச்சு போட முடியுமா? முடிச்சுப் போடுகிற அளவிற்கெல்லாம் யாருடைய நாக்கும் இல்லை. நாவில் ஏற்படுகிற சிக்கல் என்று அர்த்தம். சிக்கல் என்ற வார்த்தையைக் கூட இலக்கியமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
சிக்கல் என்றால் தைக்கிற நூலின் முதல்பகுதி எது கடைசி பகுதி எது என்று தெரியாமல் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலந்து விடுவதற்குப் பயன்படுத்துகிற வார்த்தை. ஆனாலும் இந்த சிக்கல் என்ற வார்த்தையை நமது வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் தலையில் கையை வைத்துக் கொண்டு "நான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன்", "நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறீர்கள்" என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். அப்படியெனில் நூலை வைத்து பின்னிவிட்டீர்களா என்று யாரும் கேட்க மாட்டார்கள். சிக்கல் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம் செய்ய வேண்டியதாயிற்று. யாரும் அப்படியே நேரடி அர்த்தத்தைக் கருதுவதுமில்லை. இதுபோன்றுதான் மூஸா நபி பிராத்தனையாகக் கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையையும், சூரத்துல் ஃபலக்கில் வருகிற வசனத்தின் வார்த்தையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மூஸா நபி துஆ கேட்ட வசனத்தில் வருகிற வார்த்தையான உக்தத் (عُقْدَةٌ) என்பது ஒருமை. முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதில் வருகிற வார்த்தையான உகத் (عُقَدٌ) என்பது பன்மை. எனவே உக்தத்(عُقْدَةٌ) என்றால் முடிச்சு, உகத் (عُقَدٌ) என்றால் முடிச்சுகள் என்று பொருள் வரும். சூரத்துல் ஃபலக்கில் வரக்கூடிய வார்த்தையின் ஒருமையைத் தான் மூஸா நபியவர்கள் பயன்படுத்துகிறார்கள். நாவின் முடிச்சியை அவிழ்த்து விடு என்றால் சிரமத்தை கஷ்டத்தை நீக்கிவிடு என்று அர்த்தம். சிக்கலை தீர்த்துவிடு, பிரச்சினை இல்லாமல் ஆக்கு என்று அர்த்தம். மேலே சொன்னதைப் போன்று சரியாகச் சொல்வதாக இருந்தால் அந்தத் திக்குவாயைப் போக்கிவிடு என்று அர்த்தம்.
(பார்க்க அல்குர்ஆன் 20:27)
அப்படியெனில் சூரத்துல் ஃபலக்கில் வருகிற உகத் என்ற வார்த்தைக்கு கயிற்றில் முடிச்சுப்போட்டு தாயத்து தகடுகள் போடுகிறார்களே அதற்கு நமது கவனம் போய்விடக்கூடாது. அதனால்தான் ஒருகேடும் வராதே.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் முடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அந்த இடத்தில் உக்தத்துந் நிக்காஹ் (عُقْدَةُ النِّكَاحِ) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். இதிலும் உக்தத் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
மேலும் 2:237 என்ற வசனத்தில் இறைவன் இதே உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.
... أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ...2:237 "...நிக்காஹ் என்ற முடிச்சு யார் கைவசம் இருக்கிறதோ அவன் விட்டுத்தர வேண்டும்...'' என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
முடிச்சு யார் கையில் இருக்கிறதோ என்றால் கணவன் அல்லது மனைவி கையில் இருக்கிறது என்று அர்த்தம். அப்படியென்றால் மஹர் தொகையின் மூலம் திருமணம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஒரு ஆணும் பெண்ணுமாகிய கணவன் மனைவியரிடத்தில் தான் ஒப்பந்தம் இருக்க முடியும். சம்பந்தமில்லாதவர்களுக்கு இதைச் சொல்ல இயலாது. அவர்கள் விட்டுத் தந்தால் அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.
இந்த இடத்திலும் நிக்காஹ் என்ற முடிச்சு என்பதைக் குறிக்க உக்தத் (عُقْدَةٌ) என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
அப்படியென்றால் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு முடிச்சு போட்டுக் கொண்டார்கள் என்றா அர்த்தம்? இரண்டு பேரும் தாலிகட்டிக் கொண்டார்களா? அதுவெல்லாம் இஸ்லாத்தில் இல்லை. அவள் யாரோ இவன் யாரோ என்று இருந்தார்கள். நிக்காஹ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் இருவரும் கணவன் மனைவியாக இணைந்து விட்டார்கள். எனவே இரண்டு கயிறுகளை முடிச்சுப் போட்டு சேர்ப்பதைப் போன்று இருவரையும் ஒப்பந்தத்தின் மூலம் இணைப்பதினால் அல்லாஹ் உக்தத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.
அதே போன்று மறுமணத்தைப் பற்றி 2:235 அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். பெண்கள் இத்தாவில் இருக்கிறார்கள். கணவர் இறந்தவுடன் நான்கு மாதம் பத்து நாட்களோ அல்லது குழந்தை வயிற்றில் இருந்தால் பிரசவிக்கும் வரையோ இத்தாவில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கல்யாணமும் செய்துகொள்ளக் கூடாது. கல்யாணப் பேச்சுகளை பேசி முடிவு செய்துவிடவோ கூடாது. அதைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
...وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ... 2:235 - (இத்தா என்ற) தவணை முடியும் வரை நிக்காஹ் என்ற முடிவை நீங்கள் உறுதி செய்து விடாதீர்கள்.
இந்த இடத்தில் உக்தத் என்பதற்கு முடிவு, ஒப்பந்தம் (ஆஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற்) என்று அர்த்தம். ஆக எதற்காக நான் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால், இந்த ஆயத்துக்களை விளக்குவதற்காக சொல்ல வரவில்லை. முடிச்சு என்று சொன்னவுடன் நிஜமாக முடிச்சு என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மேற்சொன்ன வசனங்களில் எதிலுமே நிஜமான முடிச்சுகள் கிடையாது. கல்யாணத்தில் நிஜ முடிச்சு இல்லை. மறுமண ஒப்பந்தத்தில் நிஜ முடிச்சு கிடையாது. மூஸா நபியின் நாக்கைப் பற்றிப் பேசுகிற வசனத்திலும் நிஜ முடிச்சு கிடையாது.
இப்போது நாம் உக்தத் முடிச்சியிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறோம்.
அப்படியெனில் இது என்னவாக இருக்கும். இதற்கு புகாரியில் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் இதே வார்த்தையைப் பயன்படுத்தி நபியவர்கள் நமக்குச் சொன்ன செய்தியில் இது என்ன என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் "இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து) விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் உளூ செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்:புகாரி 1142,3269
ஆக முடிச்சுகள் என்றால் ஷைத்தான்கள் நம்மை நல்லகாரியங்களைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக முடிச்சுபோட்டு நம்மைக் கட்டிவைக்கிறான் என்று அர்த்தம். இப்படி ஷைத்தான் நம்மை நல்ல காரியங்களில் இருந்து தடுத்து வைப்பதிலிருந்து அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடவேண்டும். இந்த விசயத்தில் எந்தளவுக்கு தயாரிப்பாகவும் விவரமாகவும் இருந்தாலும் புரண்டு விடுகிறோம்.
அதனால் தினமும் தூங்கும்போது இந்த அத்தியாயங்களை ஓதவேண்டும். அதனால்தான் நபியவர்கள் இந்த மூன்று அத்தியாயங்களையும் இரவில் ஓதச் சொன்னார்கள்.
அப்படியெனில் சுப்ஹ் தொழுகைக்கு நாம் என்ன ஏற்பாடுகளை செய்திருந்தாலும் நம்மை எழுந்திரிக்க விடாமல் இருப்பதற்காக நம் தலைமாட்டில் ஒரு ஷைத்தான் இருக்கிறான். அவனிடமிருந்து நாம் வெற்றிபெற வேண்டுமானால் நம்மீது நம்பிக்கை வைத்துவிடாமல் நமக்கு மேலே ஏழு வானங்களைத் தாண்டியுள்ள அர்ஷில் அமர்ந்திருக்கும் அல்லாஹ்விடமே பாதுகாப்பைத் தேடவேண்டும்.
எனவே அலாரத்தின் மீதும் பக்கத்தில் உள்ளவர்களின் மீதும் நம்பிக்கை வைப்பதைவிட படைத்தவன் மீது கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும். யாஅல்லாஹ்! நீ என்னை எழுப்பிவிடு! என்று அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
இதுவரை பார்த்த இந்த அத்தியாயத்தின் வசனங்களை கோர்த்து மீண்டும் ஒருமுறை அர்த்தம் செய்து பாருங்கள்.
நபியே நீங்கள் சொல்லுங்கள்.
வைகறைப் பொழுதின் இறைவனிடமிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்குகளிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
அவன் படைத்தவை என்னென்னவெல்லாம் இருக்கிறது என்ற பட்டியலை முன்னாலே நாம் பார்த்து விட்டோம். அவன் படைத்தவற்றின் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அர்த்தம்.
இரவு சூழ்ந்து கொள்ளும் போது ஏற்படும் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இதில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று சந்திரகிரகணம் ஏற்படும் போது நடக்கவிருக்கின்ற பேராபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவது. மற்றொன்று, பொதுவாக இரவு ஆரம்பிக்கும் போது ஏற்படும் தீங்கு. இருட்டு என்று இருப்பதினால் பேய்பிசாசு என்றெல்லாம் இல்லாததை இருப்பதாக நினைத்து மனிதன் அஞ்சுகிறான். அதனால் இரவின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவது.
முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இந்த வசனத்தில் வருகிற ஷைத்தானைக் குறிப்பதற்காகத்தான் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி குர்ஆனில் ஷைத்தான்களைப் பற்றி பயன்படுத்துகிற இடங்களில் பெண்பால் வார்த்தைப் பிரயோகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ(71 ) الأنعام 6
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ(210) 26
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ(221) 26
அல்குர்ஆனின் 6:71,26:210,26:221 ஆகிய வசனங்களில் ஷைத்தான்களைக் குறிப்பதற்காக பெண்பால் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
எனவே ஷைத்தான்களைக் குறிக்க பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்படுவதினால் இங்கேயும் அல்லாஹ் முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்று பயன்படுத்துகிறான். அதாவது நம்மை தொழுகைக்கு எழுந்திருக்க விடாமல் நம்மைத் தடுக்கிற ஷைத்தான்களின் தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக என்று விளங்க வேண்டும். அதனால்தான் நாம் அந்த அத்தியாயங்களை இரவில் பாதுகாப்புத் தேடுவதற்குப் பயன்படுத்துகிறோம். மேலும் தூங்கி எழுந்திருப்பதற்கும் அதில் பாதுகாப்புத் தேடுவதைத்தான் புகாரியின் 1142,3269 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஹதீஸ்களிலும் நாம் பார்க்கிறோம். இதுதான் ஸிஹ்ர்-சூனியத்தைப் பற்றிச் சொல்வதற்கு அடிப்படையாக இருந்த வசனம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
வானவர்கள் தொடர்:5
மலக்குகள் நுழையாத இடங்கள்
எம்.முஹம்மத் சலீம் எம்.ஐ.எஸ்.ஸி,மங்களம்
எங்கே செல்லலாம்? எங்கே செல்லக் கூடாது? அங்கே யாருடன் செல்லலாம்? அங்கே யாருடன் செல்லக் கூடாது? என்றெல்லாம் மார்க்கத்தில் நமக்கு செல்வதற்கு தகுந்த, தகுதியில்லாத இடங்களை சொல்லப்பட்டுள்ளதைப் போன்று மலக்குகளுக்கும் சொல்லப்பட்டுள்ளன.
அந்த இடங்களுக்கு அவர்கள் ஒரு போதும் செல்லவே மாட்டார்கள். ஆகவே, அவ்விடங்கள் எவை? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக இப்போது தெரிந்து கொள்வோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப்படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி,
ஆதாரம் : புகாரி (3225)
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள். உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்து விட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
ஆதாரம் : முஸ்லிம் (4272)
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்கüன் உருவப்படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப்படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
ஆதாரம் : புகாரி (3351)
உருவப்படங்கள், சிலைகள் மற்றும் நாய் இருக்கும் இடங்களுக்கு அருளைத் தரும் மலக்குமார்கள் மட்டுமே வர மாட்டார்கள் என்பதை மேற்காணும் செய்திகள் விளக்குகின்றன. ஆகையால் இந்த விஷயங்கள் நமது இல்லங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், இது போன்ற இடங்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகளைப் பதிவு செய்யும் மலக்குமார்கள், உயிரைக் கைப்பற்றும் மலக்குகள், சிறப்பான காரியங்களைக் கவனிக்கும் மலக்குகள், தண்டனையைக் கொண்டுவரும் மலக்குகள் போன்றவர்கள் அதாவது அருளைக் கொண்டு வரும் பணியில் இல்லாத மலக்குகள் வருவார்கள் என்பதை என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மலக்குகளின் எண்ணிக்கை
வானவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற ஞானம் அல்லாஹ் வைத் தவிர யாருக்கும் இல்லை. ஆதலால், அவர்களுக்கு நாமாகவே சுயமாக ஏதாவதொரு எண்ணிக்கையைச் சொல்லிவிடக் கூடாது. காரணம், மறைவான விஷயங்கள் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது என்று நாம் நம்பியிருக்கிறோம். இந்நிலையில், வானவர்களின் எண்ணிக்கையை நாமாக கற்பனை செய்து கூறினால், அல்லாஹ்வின் ஆற்றலான மறைவான ஞானம் நமக்கு இருப்பதாக வாதிடுவது போன்றதாகிவிடும்.
நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர் உறுதி கொள்வதற்காகவும், நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும், நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும், யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன்மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழி தவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை (வானவர்களை) அவனைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.
(திருக்குர்ஆன் 74 : 31)
வானவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என்பதைத் துல்லியமாக அறிந்தவன், அல்லாஹ் மட்டுமே. அதேசமயம் அவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்களா? அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா? குறிப்பிட்ட சில இடங்களில் எத்தனை மலக்குகள் உள்ளனர் என்பதற்கு சரியான பதிலை நம்மால் சொல்ல முடியும். அவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பின்வரும் தகவலின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
(மிஃராஜ் பயணத்தின்போது) "அல்பைத்துல் மஃமூர்' எனும் "வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், "இதுதான் "அல்பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்'' என்று சொன்னார்.
ஆதாரம் : புகாரி (3207)
பெயர் கூறப்பட்டுள்ள மலக்குகள்
நாமெல்லாம் மனிதர்கள் எனும் ஒரே இனமாக இருப்பினும், நம்மில் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக பெயர்கள் இருப்பது போல, வானவர்கள் என்ற இனத்திலும் அவர்களுக்கென தனித்தனியான பெயர்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரது பெயர்களை மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், அப்பெயர்களில் வானவர்கள் இருக்கிறார்கள் என்று நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே சமயம், அவற்றைத் தவிர்த்து மற்ற பெயர்களை நாமாக யோசித்து அப்பெயர்களிலும் மலக்குமார்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறாகும். ஆகவே பெயர் சொல்லப்பட்ட வானவர்களைப் பற்றிய ஆதாரங்களை காண்போம்.
அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 2 : 98)
"(நரகத்தின் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்கள் கதையை முடிக்கட்டும்'' எனக் கேட்பார்கள். "நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்'' என்று அவர் கூறுவார்.
(அல்குர்ஆன் 43 : 77)
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் கூறியதாவது: நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் "அல்லாஹும்ம ரப்ப ஜிப்ரீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆரிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தரிஃபூன். இஹ்தினீ ரிமக்துரிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலாஸிராதிம் முஸ்தகீம்' என்று கூறுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.)
ஆதாரம் : முஸ்லிம் (1418)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சருமஅமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாபொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகüல் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
ஆதாரம் : புகாரி (3239)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்கüல் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) "அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி),
ஆதாரம் : புகாரி (3236)
ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல், மாலிக் என்று நான்கு மலக்குமார்களின் பெயர்கள் மட்டுதான் நமக்கு சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் அனைத்து உயிர்களையும் கைப்பற்றுகிறார் என்றும் பல முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உயிரைக் கைப்பற்றும் பணிக்கென்று பிரத்யேகமாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாற்று மதத்தினர் சொல்வதைக் கேட்டு அப்படியே முஸ்லிம்களும் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வது எந்தளவிற்கு பாரதூரமான பிழை என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஏனெனில், இஸ்ராயீல் என்ற பெயரில் மலக்கு ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு சரியான ஆதாரமும் இல்லை.
இன்னும் சொல்வதெனில், நமது உயிரைக் கைப்பற்றுவதற்காக என்று நம்மில் ஒவ்வொருவருக்கும் வானவர் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நியமித்திருப்பதாக அல்லாஹ் தமது திருமறையில் குறிப்பிட்டுள்ளான். அந்த வசனங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.
"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன் 32 : 11)
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.
(திருக்குர்ஆன் 6 : 61)
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.
(திருக்குர்ஆன் 18 : 28)
தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
(திருக்குர்ஆன் 4 : 97)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள்.
(திருக்குர்ஆன் 7 : 37)
இப்லீஸ் மலக்குகளில் ஒருவனா?
ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தை வடிவமைத்த பிறகு நடந்த சம்பவத்தை திருமறையில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு அவன் அங்கிருந்த வானவர்களுக்கு கட்டளையிடும் போது அவர்கள் அனைவரும் அக்கட்டளையை நிறைவேற்றினார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிவதற்கு மறுத்ததோடு அதை நியாயம் கற்பித்து தர்க்கம் செய்தான் என்பதை திருமறையின் வசனங்களின் மூலம் தெரிந்து வைத்துள்ளோம். அந்த வசனங்களில் ஒரு வசனத்தை இப்போது பார்ப்போம்.
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இல்லை.
(திருக்குர்ஆன் 7 : 12)
வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர் என்பதை படிக்கும் சிலர் அந்த வாசகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்த இப்லீஸ் வானவர்களில் ஒருவனாகத்தான் இருந்தான் என்று வாதிடுகிறார்கள். இந்த வாதம் தவறானது என்பதை இந்த நிகழ்வு தொடர்பாக வந்திருக்கும் பிற வசனங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். அவன் மலக்குகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்று மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான். அந்த வசனத்தை இப்போது பார்ப்போம்.
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.
(திருக்குர்ஆன் 18 : 50)
வளரும் இன்ஷா அல்லாஹ்
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை ஊட்டும் கல்விமுறை
இப்னு சாபிரா
ஒரு ஆசிரியை ஒரு மாணவனால் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, மாணவ சமுதாயத்தைப் பற்றியும், எதிர்கால சமுதாயத்தைப் பற்றியும் எழுதாத பத்திரிக்கைள் இல்லை! அலசாத தொலைக்காட்சி அலைவரிசைகள் இல்லை! பல கோணங்களில் இந்தச் சம்பவம் அலசப்பட்டது.
இதைப்போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்வதற்கு நம்முடைய கல்வி முறையும் காரணம் என மனோதத்துவ மருத்துவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். அதை மேலும் ஆமோதிக்கும் வகையில் ஈஇநஊ (ஈங்ய்ற்ழ்ஹப் இர்ஹழ்க் ர்ச் நஸ்ரீட்ர்ர்ப் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) நடத்தும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வின் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் சம்பந்தமாக இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் மொழிப் புலமையைச் சோதிப்பதற்காக, ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியோ
அல்லது ஒரு கூரை தீப்படிக்கும் சம்பவத்தைப் பற்றியோ 100 முதல் 125 வார்த்தைகளில் விவரிக்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதைத் தான் பெற்றோர்கள் எதிர்க்கின்றார்கள். தேர்வு படபடப்பில் இருக்கும் மாணவர்களின் படபடப்பை மேலும் அதிகமாக்கும் வண்ணம், இதைப்போன்ற படபடப்பான சம்பவங்களைப் பற்றிய வர்ணணை அமைந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களின் எழுத்துத் திறனை சோதிக்க சுற்றுப்புற சுழல், புதிய கண்டுபிடிப்புகள் என பல விஷயங்கள் இருக்க, இதைப்போல பயங்கரத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களைப் பற்றி ஏன் கேள்வி கேட்க வேண்டும் என பெற்றோர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இப்பொழுதாவது மாணவர்களின் மனநிலைமையைப் பற்றி பெற்றோர்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.
எது போதிக்கப்படுகிறதோ அதைத்தான் மாணவர்கள் தங்களுடைய நடைமுறையில் வெளிப்படுத்துவார்கள் என பெரும்பாலானோர் இப்பொழுது உணர்கின்றனர். இந்தத் தருணத்தில், வெறும் ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் தராமல், மாணவர்களின் மற்ற விஷயங்களைப் பாதிக்காத பள்ளிக் கூடங்களை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம் பெற்றோர்கள் வெறும் மொழிப் புலமைக்காக இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளைப் போதிக்கும் கல்விக்கூடங்களைத் தேர்ந்தெடுப்பதை அறவே விட வேண்டும். இல்லையென்றால் நம்முடைய வருங்கால சமுதாயம் உலக கல்வியை மெத்தப்படித்த, ஆனால் கொடூரங்களை நிகழ்த்தக்கூடிய கொடூரர்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கம் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை வளர்ப்பதை எந்தளவிற்குத் தடுக்கிறது என்றால், யதார்த்தமான விஷயங்கள் கூட குழந்தைகளின் மனதில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடாது என்கிற உயரிய நோக்கத்தில், குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது கூட அனுமதி பெற வேண்டும் என மிக அழகாக போதிக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 24:58,59)
இப்பொழுது மாணவர்களின் மனநிலைமையைப் பற்றி அலசுபவர்கள், இதே இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் விஷத்தை ஊட்டும் வண்ணம், மாணவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது மாணவர்களின் உள்ளங்களில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
அறியாமை என்கிற இருள் விலகி, மனிதர்களை உயரிய பண்புகளோடு வாழ வேண்டிய பாடத்தை எந்தக் கல்வி போதிக்கிறதோ அது தான் உண்மையான கல்வி என்பதை அன்றாட நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்..
(அல்குர்ஆன் 39 : 9)
ஆதரவற்றவர்களை அரவணைப்போம்
என். ராஜ் முஹம்மது எம்.ஐ.எஸ்.ஸி, குழுமூர்
இவ்வுலகத்தில் நாம் வாழும் போது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமோ அதே போல் மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களின் உரிமைகளையும் பேண வேண்டியது மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனிதருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மிகச் சிறந்தது அநாதைகளை அரவணைப்பதாகும்.
அனாதைகள் மனித சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கே திக்கற்றவர்கள். எந்த வகையிலும் தங்கள் வாழ்வாதாரங்களைப் பெற்றிட எந்தவொரு பக்கபலமும் இல்லாதவர்களாக உலகில் அனாதைகள் இருந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நாமெல்லாம் எண்ணிப் பார்த்திராத வகையில் கடினமிக்கதாக இருந்து வருகிறது.
பெற்றோரின் இயற்கை மரணங்களால் அனாதைகளாகும் பிள்ளைகள்.
இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளால் நிர்க்கதியாகி போகும் பிள்ளைகள்.
போர் ஏற்படுத்திய சீரழிவுகளால் உருவாகும் அனாதைகள்.
வலிமையுள்ள ஒரு நாடு, ஏழை நாட்டின் மீது சுமத்தும் பொருளாதார நெருக்கடிகளால் அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள்.
என உலகின் பல பாகங்களிலும் நம்மைப் போன்ற மனிதர்கள் ரணங்களை மனதில் பூட்டி வைத்துக் கொண்டு நடைப் பிணமாய் இந்த அனாதைகள் நடமாடி வருகின்றனர்.
இஸ்லாம் கூறும் மனித நேயப்பணிகளில் அனாதைகளைப் பராமரிப்பதும் ஒன்று.
அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் ரவுடிகளாக, கொள்ளையர்களாக, திருடர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் நாடே பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.
சரியான வழிகாட்டுதல், தெளிவான அறிவுரைகள் இல்லாமல் கண்டிக்கப்படாமல் வளர்க்கும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே இது போன்ற குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.
இறைவன் அநாதைகளை நடத்தும் விதம் பற்றியும், அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் விதம் பற்றியும் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.
அனாதைகளுக்கு உதவுதல்
இவ்வுலகில் வாழும் போது அனாதைகளை அரவணைத்தும், அவர்களுக்கு நல்ல நிலையையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல்ல ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:220
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 4:36
"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோ ருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.
அல்குர்ஆன் 2:83
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:215
செலவிடும் முறை 2:215 வசனத்தின் விளக்கம். எதைச் செலவிட வேண்டும் என்பது தான் இங்கே கேள்வி. ஆனால் எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்வியுடன் எப்படிச் செலவிட வேண்டும் என்பதற்கும் பதிலளிக்கப்படுகிறது.
கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள் நல் வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:215) தெளிவுபடுத்துகிறது.
மற்ற பணிகளுக்குச் செலவிடுவதை விட பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகள் மற்றும் நாடோடிகளுக்கும் செலவிடுவது சிறந்ததாகும் என்பதையும் இவ்வசனம் வலியுறுத்துகிறது.
எத்தனையோ அறப்பணிகளுக்குச் செலவு செய்வோர் பெற்றோரைச் சந்தியில் விட்டு விடுகின்றனர். உறவினர்களையும், அனாதைகளையும் கண்டு கொள்வதில்லை. இவர்கள் தான் முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் இங்கே போதிக்கப்படுகின்றது.
இறைவனை அஞ்சுபவர்கள்
அனாதைகளுக்கு நன்மை செய்பவர்களும் இறை அஞ்சுபவர்கள் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
கணவாய் என்றால் என்ன?
நன்மைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது கணவாய் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். கணவாய் என்பது பிறருக்கு உதவுவது என்று குறிப்பிட்டுள்ளான்.
(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்ன வென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).
அல்குர்ஆன் 90 : 10-17
செல்வம் சிறந்த தோழனாக திகழும்...
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள். ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக்கேட்டதும் நபி (ஸல்)
அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், "என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களே உம்மிடம் பேசாமரிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர் நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; - பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல் குத்ரீ (ரலி),
நூல் : புகாரி 2842, 1465, முஸ்லிம் 1901
இறைவனுக்காக தர்மம் செய்தல்
நாம் தர்மம் செய்வதாக இருந்தால் இறைவனுக்காக தான் செய்ய வேண்டுமே தவிர பிறர் பார்க்க வேண்டும் என்றோ அல்லது பிறர் பாரட்ட வேண்டும் என்றோ அல்லது பெருமைக்காகவோ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை கீழ்கண்ட வசனம் உணர்த்துகிறது.
குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான். (நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம். நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள்.
அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அல்குர்ஆன் 76:1-9
அனாôதைகளுக்கு ஐந்தில் ஒரு பாகம்
நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும் (நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்), போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 8:41
8:41 என்ற வசனத்தின் விளக்கம் போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அதாவது போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவிகிதமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினருக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், நாடோடிகளுக்கும் சேர்த்து இருபது சதவிகிதமும் என்று பிரிக்கப்பட வேண்டும்.
இதில் அல்லாஹ்வையும் குறிப்பிட்டிருப்பதால் அவனுக்கு ஒரு பங்கு என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறப்படும் பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஸகாத் நிதியிலிருந்து எதையும் தொடக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து அவர்களுக்கும் அல்லாஹ் பங்கு ஒதுக்கினான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனாதைகளை விரட்டுபவன் மறுமையை நம்பாதவன்
சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் அனாதைகளையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துதலோ கூடாது.
அப்படி நடந்து கொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான்.
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
அல்குர்ஆன் 107 :1-3
தீர்ப்பு நாளை மெய்யாக்குபவர்கள் செய்ய வேண்டியது சமுதாயத்தில் பலவீனர்களாயிருப்போர் மீது இரக்கம் கொண்டு உதவுவதாகும்.
அனாதைகளின் சொத்துகளைப் பற்றி நபியின் வஸீயத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம் 3730
அனாதைகளை அரவணைத்த ஸஹாபாக்கள்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட செய்திகளின் மூலம் அறியலாம்.
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர், "எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன்'' என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெüத்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 380
எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி) (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுதுகொண்டு) இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 727
நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்சாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் மனைவி ஸைனப் (ரலி),
நூல் : புகாரி 1466
அனாதைகளை அரவணைத்த குறைஷிப் பெண்கள்
நபி (ஸல்) அவர்கள் குறைஷிப் பெண்களின் குணத்தைப் பற்றி கூறும் போது அனாதைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப் பெண்கள் ஆவர்' அல்லது "நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்'.அவர்கள் அநாதைக் குழந்தைகள் மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 4946
வளரும் இன்ஷா அல்லாஹ்
சொற்பொழிவு குறிப்புகள்
இடையூறுகளைத் தவிர்த்தல்
தொகுப்பு : இப்னு மர்யம்
சாட்சி சொல்பவர்களுக்கு இடையூறு அளிக்காதீர்
وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُوا فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمْ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(282) سورة البقرة
ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:282)
விவாகரத்து செய்த பெண்களுக்கு இடையூறு கொடுக்காதீர்
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ (٦) الطلاق
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்!
(அல்குர்ஆன் 65:6)
وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (٢٣١) سورة البقرة
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:231)
ஏழைத் தந்தையைத் துன்பப்பப்படுத்தாதீர்
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لا تُكَلَّفُ نَفْسٌ إِلا وُسْعَهَا لا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ ... (٢٣٣) سورة البقرة
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:233)
அடுத்தவர்களுக்கு துன்பம் தாரதவனே முஸ்லிம்
10 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளிலி)ருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி),
நூல் : புகாரி (10)
3924 عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ الْجَنْبِيِّ أَنَّ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ رواه ابن ماجة
எவர்களிடமிருந்து செல்வத்திலிருந்தம் உயிர்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பு பொறுகிறார்களோ அவரே முஃமினாவார். எவர் சிறிய, பெரிய பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
நூல் : இப்னுமாஜா (3924)
பாதையில் அமர்ந்து தொல்லை தராதீர்
2465 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ رواه البخاري
"நீங்கள் சாலைகüல் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்,
"அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி (2465)
தீமையை செய்யாமலிருப்பதும் நன்மை
1445 حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ عَنْ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ رواه البخاري
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?'' எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், " ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்'' என்றார்கள். தோழர்கள், "அதுவும் முடியவில்லையாயின்'' எனக் கேட்டதற்கு, "தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்'' என்று பதிலளித்தார்கள். தோழர்கள் " அதுவும் இயலவில்லையாயின்'' என்றதும் "நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : புகாரி (1445)
தொல்லை தரும் பொருட்களை அகற்றவது இறைநம்பிக்கையைச் சார்ந்தது
51 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான' அல்லது "அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),
நூல் :முஸ்லிம் (58)
1675 حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلَاثِ مِائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَ اللَّهَ وَهَلَّلَ اللَّهَ وَسَبَّحَ اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلَاثِ مِائَةِ السُّلَامَى فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنْ النَّارِ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் :முஸ்லிம் (1833)
853 عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا رواه البخاري
வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது
853 عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا رواه البخاري
கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச்- சாப்பிட்டவர் நம் பள்üவாசலுக்கு நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் :புகாரி (853)
நிழல் தரும் இடங்களில் அசுத்தம் செய்யக்கூடாது
397 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு, "மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),
நூல் முஸ்லிம் (448)
அடுத்தவருக்கு இடையூறு தரும் விதமாக அம்பை எடுத்துச் செல்லக் கூடாது
حَدَّثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْسِكْ بِنِصَالِهَا رواه البخاري
(மஸ்ஜிதுந் நபவீ) பள்üவாசலுக்குள் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்!'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (451)
தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்
அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா?
(أول ما خلق الله نور نبيك يا جابر - الحديث) رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد الله بلفظ قال قلت : يا رسول الله ، بأبي أنت وأمي ، أخبرني عن أول شئ خلقه الله قبل الأشياء . قال : يا جابر ، إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره ، فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ، ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي ، فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء ، فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ، ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهى المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله - الحديث- كشف الخفاء - (1 / 265)
அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள், வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான். முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)
நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265
இந்தச் செய்தி பரவலாக நபிகளாரின் சிறப்பு என்ற பெயரில் இமாம்களின் சொற்பொழிவில் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். குறிப்பாக மீலாது மேடைகளில் பேசுபவர்கள் இறைவனின் ஒளியைக் கொண்டே நபிகளார் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களே முதல் படைப்பு என்றும் மேற்கூறிய செய்தியை அடிப்படையாக வைத்து நீட்டி முழங்கிவருகின்றனர்.
இந்தச் செய்தி சில திருக்குர்ஆன் விரிவுரை நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. தப்ஸீரு ரூஹில் மஆனீ, தப்ஸீரு ரூஹில் பயான் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும்.
ஆனால் இந்தச் செய்தி எந்த அடிப்படையும் இல்லாத திருக்குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும்.
இந்தச் செய்தி முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த நூலில் இந்தச் செய்தி இடம் பெறவில்லை. மேலும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய எந்த நூலிலும் இது இடம் பெறவில்லை.
முஸன்னஃப் அல்ஜாமிவுல் கபீர் அஸ்ஸுனன் தஃப்ஸீருல் குர்ஆன் ஆகிய நூல்கள் தான் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதில் எதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்று இச்செய்தியை ஆய்வு செய்த அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் பார்த்த வரையிலும் இந்த செய்தி அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதிய நூல்களில் இடம்பெறவில்லை.
இந்தச் செய்தி ஜன்னத் குல்த் என்ற அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் நூலில் இடம் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இப்படி ஒரு நூலை அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் எழுதியதாக பார்க்க முடியவில்லை.
மேலும் இந்தச் செய்தி திருக்குர்ஆன் கருத்துக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரணாக உள்ளது.
மனிதனை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்ததாக கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மனிதரே என்று பல இடங்களில் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
(அல்குர்ஆன் 30:20)
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)
"என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:93)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:20)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் :முஸ்லிம் (5722)
நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்ற செய்திக்கு எந்த ஆதாரமும் இல்லாததாலும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் மாற்றமாக இருப்பதாலும் இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்பதில் ஐயமில்லை.
அல்லாஹ்வை எப்படி நம்புவது? தொடர் :4
ஓதிப் பார்க்கலாமா?
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை
நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் போதல்லாம் அவர்கள் தமது உடலில் குல் என்றும் துவங்கும் அத்தியாயங்களை ஓதி ஊதி தமது கைகளால் தடவிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு வயது முதிர்ந்து உடல் தளர்வு ஏற்பட்ட போது அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்கள் ஓதி நபி (ஸல்) அவர்களின் கரத்தினால் உடல் முழுவதும் தடவி விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
பாதுகாப்புக்கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள் மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
ஆதாரம் முஸ்லிம் 4413
குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் பலக், அல் ஹம்து இது போன்ற அத்தியாயங்களை நோய் வரும் போது ஓதினால் அல்லாஹ் அதன் மூலம் நிவாரணத்தை ஏற்படுத்துவான்.
ஆனால் ஓதிப் பார்த்தலைப் பொறுத்தவரை இதைத் தொழிலாக செய்பவர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதினால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை ஓதிப் பார்ப்பதைப் பொறுத்தவரை நாம் ஆராய்ந்து பார்த்தால் அவரவர்கள் தான் ஓதிப் பார்க்க வேண்டுமே தவிர இது போன்ற புரோகிதர்களிடம் சென்று ஓதிப் பார்ப்பதை விட்டு விடவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நோய்க்கு நிவாரணத்தை ஏற்படுத்தும் சிறிய சூறாக்களை நாம் மனனம் செய்து வைத்திருந்தால் இவைகளை நோய் ஏற்படும் போதும் ஓதிக் கொள்ளலாம் தொழுகையின் போதும் ஓதிக் கொள்ள முடியும்.
நோயாளிக்கு பிறர் எப்போது ஓதிப் பார்க்கலாம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்') ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள் மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
ஆதாரம்: முஸ்லிம் 4413
எப்போது பிறர் ஓதிப் பார்க்க வேண்டும் என்பதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த நபி மொழி நமக்கு ஆதாரமாக உள்ளது.
எவற்றை நோய் நிவாரணத்திற்கு ஓதிப்பார்க்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களோ அதை ஓதுவதன் மூலமும் நோய் நீங்கும்.
நோயாளிகளால் ஓத முடியாது போனால் மற்றவர்கள் ஓதலாம்.
இதன் அடிப்படையில் தான் அபூ சயீத் (ரலி) தேள் கடிக்கு ஆளானவருக்கு அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார்கள்.
ஓதிப்பார்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று நினைத்துக் கொண்டு புரோகிதர்களைத் தேடிச் சென்று ஓதிப்பார்க்கின்றனர். ஆனால் அவரவர் தனக்காக ஓதிக் கொள்வதே சரியான நடைமுறையாகும். மேலும் ஓதிப்பார்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தியாயங்களும் துஆக்களும் எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பவைதான்.
அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.
இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும்.
சாதாரண நோய்களுக்கு நாம் நோய் நிவாரணத்தை நீக்கும் மாத்திரைகளை தெரிந்து வைத்திருக்கின்றோம். இது போன்று நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்னச்சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருகின்றது போல் சிறிய சூராக்களை நோய் ஏற்படுகின்ற போது ஓதுவதற்கு தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
சிறந்த தம்பதிகள்
யாசர் அரஃபாத், மங்களம்-திருப்பூர்
பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சினை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதற்கும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாகும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறன. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.
கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகி வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன் சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்க்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.
அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்கேற்ப தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில்:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஆம், இருக்கிறது என்று கூறி விட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியால் என் கையைக் கட்டி விட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். உணவுடனா அனுப்பியுள்ளார்? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், எழுந்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி ஸல்- அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி -ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா! என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) சொன்னார்கள். பிறகு, பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளி யேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.
நூல் : புகாரி (3578)
இறைத்தூதர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கண்ட இந்த தம்பதிகள் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக
அவர்களுக்காக இருவரும் இணைந்து செய்த தொண்டை இந்த சம்பவத்தில் காணமுடிகிறது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் உம்மு சுலைம் (ரலி):
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்க வில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப் பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப் பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனா வுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங் களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
நூல்: புகாரி (2630)
அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதில் அபூ தல்ஹா (ரலி):
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் "பைரஹா' எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்'' எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்'' என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (1821)
போர்க்களத்தில் அபூ தல்ஹா (ரலி) அவர்களும் உம்மு சுலைம் (ரலி) அவர்களும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்பு களில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகைள நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.
நூல் :புகாரி (3811)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம் முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்'' என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற் காகத்தான் அதை வைத்துள்ளேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றி யின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 3697
இந்த தம்பதிகளைப் போன்று நாமும் மறுமை வெற்றியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு உலக விஷயங்களில் விட்டுக் கொடுத்து பிணக்களை களைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுத்துவோம்.
தகவல் களஞ்சியம்
யார் இவர்?
தொகுப்பு : மனாஸ், இலங்கை
1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.
2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள்.
3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார்.
4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று கூடினார்கள். 5 இவரின் தாயார் இறந்தபோது அவர் சார்பாக ஏதாவது தர்மம் கொடுக்கலாமா? என்று நபியர்வர்களிடம் கேட்டவர்
6 இவருடைய தாயார் இறந்த போது மிஹ்ராப் என்ற தோட்டத்தை தாயாருக்காக வேண்டி தர்மம் செய்தவர்.
7 மக்கா வெற்றியின் போது அன்சாரிகளின் கொடி இவர்களிடம் இருந்தது.
8 அப்துல்லாஹ் பின் உபை மன்னிக்குமாறு நபிகளாரிடம் பரிந்துரை செய்தவர்.
9 நபியர்கள் இவருடைய ரோசத்தை கண்ட போது அவரைவிட நான் ரோஷக்காரன், அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.
10 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள்.
யார் ஈவர்?
விடை: ஸஅத் பின் உபாதா (ரலி-) அவர்கள்
1 ஆதாரம் புகாரி 1284 2 ஆதாரம் புகாரி 1304
3 ஆதாரம் புகாரி 4141 4 ஆதாரம் புகாரி 3668
5 ஆதாரம் புகாரி 2756 6 ஆதாரம் புகாரி 2762
7 ஆதாரம் புகாரி 4280 8 ஆதாரம் புகாரி 4566
9 ஆதாரம் புகாரி 6846 10 ஆதாரம் புகாரி 7155
Published on: 02.05.2012. 11:28 Views: 582

