54. மதம் மாற்றப் போர் கூடாது
54. மதம் மாற்றப் போர் கூடாது
திருக்குர்ஆனின் 2:193, 8:39 ஆகிய இரு வசனங்களில் "கலகம் இல்லா தொழிந்து, "தீன்' அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்'' என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் "தீன்' என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது. ஆனால் திருக்குர்ஆனில் பல இடங்களில், மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: திருக்குர்ஆன் 2:256, 10:99, 9:6, 109:6)
அவ்வாறிருக்க "மதமாற்றம் செய்யும் வரை போரிடுங்கள்'' என்று பொருள் கொள்ளவே முடியாது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக யூத கிறித்தவர்கள், யூத கிறித்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாகவும் அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.
மேலும் மேற்கண்ட இரு வசனங்களின் பிற்பகுதியைக் கவனித்தால் கூட அவ்வாறு பொருள் கொள்வது தவறு என்பதை விளங்க முடியும். "அவர்கள் விலகிக் கொண்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது'' என்று அவ்வசனங்கள் முடிகின்றன. இதிலிருந்தும் மேற்கண்ட விளக்கம் தவறு என்பது உறுதியாகின்றது.
"தீன்' எனும் சொல் பல அர்த்தங்கள் கொண்ட சொல்லாகும். மார்க்கம், கூலி, பரிசு, தீர்ப்பு, அதிகாரம் என்று பல அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன.
இவ்விரு வசனங்களிலும் அதிகாரம் என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது. போர் என்று வந்து விட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும்.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 10, 2009, 6:16 PM Views: 549

