406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்ப
406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்
ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, "உம்மை மனிதர் களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' எனவும் குறிப்பிடுகின்றது.
மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலெல்லாம் ஒரு முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் மனிதர் தன்னுடன் ஒரு கழுதையையும், உண்பதற்கான சில உணவுகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார். இந்நிலையில் அவரை நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்த இறைவன், கழுதையையும் மரணிக்கச் செய்து மக்கிய எலும்புகளாக்கினான். ஆனால் அந்த மனிதர் கொண்டு வந்த உணவும் தண்ணீரும் நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது.
இந்நிகழ்ச்சியில் இருப்பதாக இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?
உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில் தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதை மக்கிப் போகின்றது. அதே சமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது.
குளிர் பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.
பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது; அதை ஆய்வு செய்யுங்கள் என்ற கருத்து உள்ளடங்கி இருப்பதால் தான் "அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' என்று இறைவன் கூறுகின்றான்.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 11, 2009, 4:34 PM Views: 544

