359. யார் மீது போர் கடமை?
359. யார் மீது போர் கடமை?
போர் செய்யுமாறு கட்டளையிடும் வசனங்களை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு தவறான நட வடிக்கைகளில் இறங்கி விடுகின்றனர்.
திருக்குர்ஆனில் உள்ள பல கட்ட ளைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.
அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.
திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இதுபோல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.
4:75 வசனத்தில் "பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது?'' என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொனாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டுத் தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.
ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் அந்தப் பலவீனர் களுக்குத் தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே தேவையேற்படும் போது அரசாங்கத்தின் மீது தான் போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல.
8:60 வசனத்தில் பலவிதமான போர்த்தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.
இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படைபலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படைபலத்தில், பத்தில் ஒரு பங்கு தான் போதுமான படை பலமாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. (பார்க்க: திருக்குர்ஆன் 8:65)
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படைபலத்தில் பாதி படை பலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது தான் குர்ஆனின் கட்டளை. (பார்க்க: திருக்குர்ஆன் 8:66).
படை பலம் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
இதனால் மிகப் பெரிய இழப்புகள் தான் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும்பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத் தான் கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்ட போது தான் போர் செய்தனர்.
இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கித் தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 53, 76, 197, 198, 203 ஆகிய குறிப்புகளையும் காண்க!
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: 11.07.2009. 19:30 Views: 545

