222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

 222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

இவ்வசனங்களில் (11:44, 29:15, 54:15, 26:121) நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.

1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2ஆம் தேதியன்று கிழக்குத் துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது.

இம்மலைத் தொடரின் மேற்குப் பகுதியில், 14,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.

14 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.

மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.

"அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?'' என்று கூறி, இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாகவுள்ளது.

To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: 11.07.2009. 02:27 Views: 585

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top