217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக் காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனம் (10:92) கூறுகின்றது.
ஃபிர்அவ்னின் உடல், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்பதால் தான் அவனது உடலைப் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்பதற்காக உரிய ரசாயனங்களைப் பயன்படுத்தி ஒரு பெட்டியில் உடலை வைத்து மூடுவார்கள். இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல் "மம்மி' எனப்படுகிறது. பிறகு அதன் மேல் பிரமிட் எனும் கோபுரத்தை அமைப்பார்கள்.
1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து இது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கரையில் ஒதுங்கி, அன்றைய மக்கள் அதை எடுத்து "மம்மி' யாக்கி மன்னர்களை அடக்கம் செய்யும் ஒரு பள்ளத்தாக்கில் புதைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்தபின் ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுத்து மீட்கப்பட்டது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிரூபிக்கும் சான்றாகும்.
மேற்கண்ட வசனத்துக்கு வேறு விதமாகவும் அறிஞர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
உனக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் பொருட்டு இன்றைய தினம் உன்னை உன் உடலுடன் நாம் பாதுகாப்போம் என்பது தான் இவ்வசனத்தில் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது. உயிரற்ற உடலைப் பாதுகாப்போம் என்ற பொருளை இவ்வாசகம் தராது. மேலும் என்று அவன் மூழ்கடிக்கப்பட்டானோ அன்று காப்பாற்றப்பட்டதாகத்தான் இவ்வசனம் கூறுகிறது. இன்று உன்னை உன் உடலுடன் பாதுகாப்போம் என்ற வாசகத்தில் இருந்து இதை அறியலாம்.
பிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தினரும் மூழ்கடிக்கப்பட்ட உடன் பிர்அவ்ன் மட்டும் உயிருடன் கரையில் உயிருக்குப் போராடும் நிலையில் ஒதுக்கப்பட்டான். படைபலமும் அதிகாரமும் இல்லாதவனாக அவன் கரைக்கு ஒதுங்கியதால் பொது மக்களுக்கு அவன் பாடமாக ஆகி மரணித்தான் என்று அவர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். குர்ஆனின் நேரடியான வார்த்தைகளுக்கு இந்த விளக்கமே நெருக்கமாக உள்ளது. இவ்வாறு விளங்கும் போது கண்டெடுக்கப்பட்ட உடலை பிர்அவ்னின் உடல் என்று சொல்ல வேண்டிய நிலை வராது. அது பிர்அவ்னின் உடலாகவே இருந்தாலும் அது குர்ஆன் சொன்ன முன்னறிவிப்பு என்று ஆகாது.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: 11.07.2009. 02:20 Views: 579

