202. மாதங்கள் பன்னிரண்டு

202. மாதங்கள் பன்னிரண்டு

 

இவ்வசனத்தில் (9:36) "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது.

மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது.

வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை.

கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைக்கும் வரை பலவிதமான கணக்குகளில் ஆண்டுகளைக் கணித்து வந்தனர்.

ஒரு காலகட்டத்தில், 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்களே ஒரு வருடமாக இருந்துள்ளது. இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம்.

மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும்.

ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது.

நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும்.

மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது.

வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும் பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: 11.07.2009. 01:58 Views: 545

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top