200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன
200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?
இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் பள்ளிவாசலே அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. போக்களங்களில் கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் பள்ளிவாசலில் தான் கட்டி வைக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் ஏற்படும் வழக்கு விவகாரங்களையும் பள்ளிவாசலில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை செய்வார்கள். முஸ்லிமுக்கும் யூதருக்கும் இடையே ஏற்படும் வழக்குகளும் இதில் அடக்கம். பல நாட்டு முஸ்லிமல்லாத தலைவர்களும் நபிகள் நாயகத்தை பள்ளிவாசலில் சந்தித்துள்ளனர். எனவே உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலுக்கும் முஸ்லிமல்லாதவர்கள் வருவது அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆயினும் உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஅபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. (திருக்குர்ஆன் 9:28)
இதை மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது. ஏனெனில் கஅபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்துக்கும், அதன் வளாகத்துக்கும் சிறப்பான தனிச் சட்டங்கள் உள்ளன. அங்கே பகை தீர்க்கக் கூடாது. புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.
இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப் பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள புனித பூமியாகவும் அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.
அந்த ஆலயத்தில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்ற சொல் மற்ற பள்ளிவாசல்களில் தடையில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
11.07.2009. 01:55
