143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

 

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். மேலும் அந்தக் காலத்தில் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய சாதனங்களாக மரப்பட்டைகளும், தோல்களுமே பயன்பட்டன.

இத்தகைய கால கட்டத்தில் 23 வருடங்களில் சிறிது சிறிதாக அருளப்பட்ட திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகள் கடந்து விட்ட பிறகும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எவ்வித மாறுதலுக்கும் இடம் தராமல் அருளப்பட்ட மூல மொழியிலேயே இவ்வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவ்வேதம் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று கருத முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பல வகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை முழுமையாகப் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்க்க: முடியாது.

ஆனால் இவ்வசனத்தில் (15:9) "இதை நாமே அருளினோம், நாமே பாதுகாப்போம்'' என்று இறைவன் உத்தரவாதம் அளிக்கிறான். திருக்குர்ஆனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எத்தனையோ நூல்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன நிலையில் திருக்குர்ஆன் அருளப்பட்ட வடிவத்திலேயே பாதுகாக்கப்பட்டு வருவது இது இறைவனின் வேதம் என்பதற்குச் சான்றாக உள்ளது.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: 10.07.2009. 12:24 Views: 539

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top