அத்தியாயம் : 41
அத்தியாயம் : 41
ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டது
மொத்த வசனங்கள் : 54
இந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ஹா, மீம்.2
2. அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்புடையோனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
3. (இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.227
4. நற்செய்தி கூறக் கூடியதாகவும், எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும் (இது இருக்கிறது) அவர்களில் பெரும்பாலோர் புறக்கணித்தனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
5. "நீர் எதை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் (தடுப்பதற்காக) எங்கள் உள்ளங்களில் மூடிகள் இருக்கின்றன. எங்கள் காதுகளில் அடைப்பும் உள்ளது. எங்களுக்கும், உமக்கும் இடையே ஒரு திரையும் இருக்கிறது. எனவே நீரும் செயல்படுவீராக! நாங்களும் செயல்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
6. "நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
7. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும்1 மறுப்பவர்கள்.
8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி உண்டு.
9. "பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?179 மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக!
10. நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான்.248 அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான்.179 கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.408
11. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.353 "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.96
12. இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.179 ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்).307 இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
13. அவர்கள் புறக்கணித்தால் "ஆது மற்றும் ஸமூது சமுதாயத்திற்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்ற இடி முழக்கத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று கூறுவீராக!
14. "அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்!'' என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் "எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' எனக் கூறினர்.154
15. ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.
16. எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில்381 அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
17. ஸமூது சமுதாயத்துக்கு நேர் வழி காட்டினோம். அவர்கள் நேர் வழியை விட குருட்டு வழியையே விரும்பினார்கள். எனவே அவர்கள் சம்பாதித்ததன் காரணமாக இடி முழக்கம் எனும் இழிவான வேதனை அவர்களைத் தாக்கியது.
18. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.
19. அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில்1 அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.
20. முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
21. "எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். "ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும்.
22. உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.
23. இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே இழப்பை அடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.
24. இவர்கள் பொறுத்துக் கொள்வார்களானால் நரகமே இவர்களின் தங்குமிடமாகும். இவர்கள் (இங்கே வணக்க வழிபாடுகள் செய்வதை) சிரமமாகக் கருதுவார்களானால் (அதற்காக) சிரமப்படுத்தப்படுவோர் அல்லர்.
25. இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் இழப்பை அடைந்தோராகி விட்டனர்.
26. "இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
27. (நம்மை) மறுத்தோருக்குக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த தீயவற்றை அவர்களுக்குக் கூலியாகக் கொடுப்போம்.
28. இதுவே அல்லாஹ்வின் பகைவர்களுக்குரிய கூலியாகிய நரகம். அதில் அவர்களுக்கு நிரந்தரமான இல்லம் இருக்கிறது. இது நமது வசனங்களை அவர்கள் மறுத்ததற்கான கூலி.
29. எங்கள் இறைவா! ஜின்களிலும், மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.
30. "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சி யடையுங்கள்!'' எனக் கூறுவார்கள்.
31, 32. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.26
33. அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
34. நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
35. பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
36. ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
37. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!396
38. அவர்கள் பெருமையடித்தால், உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும், பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
39. பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது (பயிர்) செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
40, 41. நமது வசனங்களை வளைப்போரும், இந்த அறிவுரை தங்களிடம் வந்த போது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்து விட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? அல்லது கியாமத் நாளில்1 அச்சமற்றவனாக வருபவனா? நினைத்ததைச் செய்யுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கக் கூடிய வேதம்.26
42. இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.351
43. (முஹம்மதே!) உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது. உமது இறைவன் மன்னிப்புடையவன்; துன்புறுத்தும் வேதனையுடையவன்.
44. இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?'' என்று கூறுவார்கள். "இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நோய் நிவாரணமுமாகும்'' என்று கூறுவீராக! நம்பிக்கை கொள்ளாதவர்களின் காதுகளில் அடைப்பு உள்ளது. இது அவர்களுக்குக் குருட்டுத் தனமாகவும் தெரிகிறது. அவர்கள் தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுகின்றனர்.227
45. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து வார்த்தை முந்தியிருக்காவிட்டால் இவர்களுக்கிடையே தீர்ப்பளிக் கப்பட்டிருக்கும். இவர்கள் இதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
46. யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. உமது இறைவன் அடியாருக்கு அநீதி இழைப்பவனல்லன்.
48. இதற்கு முன் அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும். தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று உறுதி கொள்வார்கள்.
49. (உலகில் உள்ள) நல்லவற்றைப் பிரார்த்திப்பதில் மனிதன் சோர்வு கொள்ள மாட்டான். அவனுக்குத் தீங்கு ஏற்படுமானால் அப்போது அவன் நம்பிக்கையிழந்தவனாகவும், நிராசையுடையவனாகவும் இருக்கிறான்.
50. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் நமது அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் "இது எனக்குரியது. அந்த நேரம்1 வரும் என்று நான் நினைக்கவில்லை. என் இறைவனிடம் நான் கொண்டு செல்லப்பட்டால் அவனிடம் எனக்கு நன்மையே ஏற்படும்'' எனக் கூறுகிறான். (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்தவற்றை அறிவிப்போம். அவர்களுக்குக் கடுமையான வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.
51. மனிதனுக்கு நாம் அருள்புரிந்தால் அலட்சியம் செய்து தன் பக்கமே திரும்பிக் கொள்கிறான். அவனுக்குத் தீமை ஏற்பட்டால் அவன் நீண்ட பிரார்த்தனை செய்பவனாக இருக்கிறான்.
52. "இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து நீங்கள் இதை ஏற்க மறுத்து விட்டால் தூரமான வழிகேட்டில் உள்ளவனை விட மிகவும் வழி கெட்டவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக!
53. அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
54. கவனத்தில் கொள்க! அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பதில் சந்தேகத்திலேயே உள்ளனர். கவனத்தில் கொள்க! அவன் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக அறிபவன்.
09.07.2009. 04:40
