அத்தியாயம் : 76

அத்தியாயம் : 76

அத்தஹ்ர் - காலம்

மொத்த வசனங்கள் : 31

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .

1. குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?

2. மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.207

3. அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.

4. (நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம்.

5. நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும்.

6. ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.

7. அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்1 பற்றி அஞ்சுவார்கள்.

8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

9. அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை

10. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை1 நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.)

11. எனவே அந்த நாளின்1 தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.

12. அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.

13. அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.

14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.

15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.

16. அது வெள்ளி போன்ற பளிங்குகளால் ஆன கிண்ணங்கள்! அவற்றைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள்.

17. அங்கே குவளையிலிருந்து புகட்டப்படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.

18. அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.

19. இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!

20. நீர் காணும் போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்!

21. அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.

22. இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.6

23. (முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.269

24. எனவே உமது இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பீராக! அவர்களில் பாவம் செய்பவருக்கோ, (ஏக இறைவனை) மறுப்பவருக்கோ கட்டுப்படாதீர்!

25. உமது இறைவனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைப்பீராக!

26. இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக!

27. அவர்கள் இவ்வுலகை விரும்புகின்றனர். தமக்குப் பின்னே (வரவிருக்கும்) கடினமான நாளை1 விட்டு விடுகின்றனர்.

28. நாமே அவர்களைப் படைத்தோம். அவர்களின் அமைப்பை வலுப்படுத்தினோம். நாம் நினைத்தால் அவர்களுக்குப் பகரமாக அவர்களைப் போன்றோரை மாற்றி விடுவோம்.

29. இது அறிவுரை. விரும்பியவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறார்.

30. அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

31. தான் நாடியோரை அவன் தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.

To read this Chapter in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

Published on: July 9, 2009, 3:51 PM Views: 587

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top